கடலில் பயங்கர சண்டை- கரும் புலிகள் தாக்குதலில் 10 இலங்கை கடற்படை வீரர்கள் பலி
கொழும்பு: கடற் புலிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் இலங்கை கடற்படையின் அதிவேக தாக்குதல் படகு சிதறி கடலில் மூழ்கியது. இதில் 10 கடற்படை வீரர்கள் பலியாயினர்.
முல்லைத் தீவு பகுதியில் இன்று அதிகாலை 2.20 மணிக்கு இச் சம்பவம் நடந்தது. இப் பகுதியில் தங்களுக்கும் இலங்கை கடற்படையினருக்கும் இடையே கடும் மோதல் நடந்ததாகவும், தங்களது தாக்குதலில் கடற்படை படகு சிதறடிக்கப்பட்டதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மோதலில் 3 கடற் புலிகளும் பலியானதாக புலிகள் கூறியுள்ளனர்.
ஆனால், இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் தஸநாயகே இதை மறுத்தார். கடலில் கண்ணிவெடியில் தங்களது படகு சிக்கியதாகவும் அதிலிருந்த 10 வீரர்களைக் காணவில்லை என்றும் 6 பேர் மட்டும் காப்பாற்றப்பட்டு்ள்ளதாகவும் கூறினார். அந்தப் பகுதியில் புலிகளின் படகே இல்லை என்றார்.
இதற்கிடையே கடலில் புலிகள்-கடற்படை இடையிலான மோதல் தொடர்ந்து கொண்டுள்ளதாக இலங்கையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.