உள்ளாட்சி தேர்தலில் கணக்கு காட்டாத 1700 பேருக்கு தடை
நெல்லை: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு அது தொடர்பான கணக்கை தாக்கல் செய்யாத 1700 பேர் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நெல்லை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி ஓன்றிய அலுவலர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 1700 பேர் தங்களது செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை. தேர்தல் நடந்த தேதியில் இருந்து ஒரு மாதத்திற்குள் இந்த செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் அதன் பின்னர் கணக்கை தாக்கல் செய்ய பல சந்தர்ப்பங்கள் வழங்கியும் அவர்கள் தாக்கல் செய்யவில்லை.
இதனால் இந்த 1700 பேரும் தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் இப்போது பதவியில் இருப்பவர் யாரும் இல்லை. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நீதிமன்றங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்தல் விதிகள், சட்ட பிரிவுகளை அதிகாரிகள் படித்து புரிந்து கொண்டால் வழக்குகளை சந்திக்க வேண்டிய அவசியம் வராது. எனவே ஊராட்சி விதிகள், மாநகராட்சி, நகராட்சி சட்டம் குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் தேர்தல்களில் அதிகாரிகள் சிறப்பாக செயல்பட முடியும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications