காட்டாற்றில் சிக்கிய அரசு பஸ்: 17 பயணிகள் உயிர் தப்பினர்

தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒருவாரமாக கோடை மழை தீவிரமாக பெய்து வருகிறது.
குமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை போன்ற தென் மாவட்டங்களில் பெரும்பாலான குளங்கள், கண்மாய்கள் நிரம்பிவிட்டன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி கருமேனி ஆற்றில் மழை வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. மழை வெள்ளத்தோடு அருகில் உள்ள மலைகளில் இருந்து வந்து சேரும் காட்டாறுகளாலும் கருமேனி ஆறு கரைபுரண்டோடுகிறது. இதனால் உடன்குடி அருகே உள்ள மணிநகரம் தரைபாலம் வெள்ளத்தால் மூழ்கிவிட்டது.
இந்த நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் திசையன்விளையில் இருந்து திருச்செந்தூர் சென்ற அரசு பஸ் அந்த வழியாக வந்தது. அதில் 17 பயணிகள் இருந்தனர்.
தரைபாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை அறியாத டிரைவர் பஸ்சை பாலத்தில் ஓட்டினார். பாலத்தைப் பாதி கடக்கையில் வெள்ளத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பஸ் திணறி நின்றது. தண்ணீரின் இழுவையால் பாலத்தின் விளிம்பைநோக்கி பக்கவாட்டில் பஸ் நகர்ந்தது.
அப்போது என்ஜினுக்குள் தண்ணீர் குபுகுபுவென புகுந்ததால் அதன் இயக்கம் நின்றது. பலமுறை முயற்சித்தும் பஸ்ஸை ஸ்டார்ட் செய்ய முடியவில்லை. இதனால் டிரைவர் செய்வது அறியாது திகைத்தார்.
வெள்ளத்தின் வேகம் நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்ததால் பஸ் காகித கப்பல் போல மெல்ல அலைபாய்ந்தது. அதில் இருந்த 17 பயணிகளும் கலவரமடைந்து அலறினர். அதிகாலை நேரம் என்பதால் அப்பகுதியில் ஆள் நடமாட்டமும் இல்லை.
உதவிக்கு வர யாரும் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட பஸ்சின் டிரைவரும் கண்டக்டரும் நீச்சல் தெரிந்த ஆண் பயணிகளின் உதவியோடு 8 பெண் பயணிகளை முதலில் பத்திரமாக கரைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் மற்ற பயணிகளும் கரை சேர்க்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் இதுபற்றி போக்குவரத்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த அதிகாரிகள் அந்த வழியாக வந்த வாகனங்களை மேற்கொண்டு செல்லாமல் தடுத்து நிறுத்தினர். அனைத்து வாகனங்களும் குலசேகரப்பட்டினம், மணப்பாடு, உவரி வழியாக திருப்பிவிடப்பட்டன.
மீட்பு வாகனத்தைக் கொண்டு ஆற்றில் சிக்கிய பஸ்ஸை மீட்க முயன்றனர். ஆனால் தொடர்ந்து கனத்த மழை பெய்வதாலும் ஆற்றில் வெள்ள நீர் அதிகரித்து வருவதாலும் பஸ்ஸை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகின்றனர்.
கடந்த 2005 அக்டோபரில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது பட்டுக்கோட்டை அருகிலும் மற்றொரு இடத்திலும் இதேபோல காட்டாற்றைக் கடக்க முயன்ற 2 பஸ்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications