மலையில் ஒரு மத நல்லிணக்கம்!
சென்னை: பங்குனி உத்திரம், மிலாடு நபி, புனித வெள்ளி ஆகிய மூன்று மத விழாக்களும் நேற்று நடந்ததால், சென்னை அருகில் உள்ள திரிசூலம் மலையில் மும்மதத்தினரும் திரண்டனர். எந்தவித பிரச்சினையும் இல்லாமல் மூன்று மதத்தினரும் மிக இணக்கமாக தங்கள் வழிபாடுகளை நடத்திவிட்டுச் சென்றனர்.
இந்துக்களின் பங்குனி உத்திரம், இஸ்லாமியர்களின் மீலாது நபி மற்றும் கிறிஸ்தவர்களின் புனித வெள்ளி ஆகிய மூன்று முக்கிய நிகழ்ச்சிகளும் நேற்று ஒரே நாளில் வந்தது.
இதனால் தமிழகம் முழுவதும் இந்த மூன்று மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந் நிலையில் சென்னை அருகில் உள்ள திரிசூலம் மலையில் மூன்று மதத்தினரும் திரண்டனர்.
திரிசூலம் மலையில் ஒரு முருகன் கோவில் உள்ளது. பங்குனி உத்திரத்தையொட்டி இங்கு இந்துக்கள் திரண்டனர். அதே மலைப் பகுதியில் ஒரு தர்காவும் உள்ளது.
மேலும் சர்ச் ஒன்றும் உள்ளது.
இதன் காரணமாக மூன்று மதத்தினரும் இங்கு வழிபாட்டுக்காக கூடினர். ஆயிரக்கணக்கில் மூன்று மதத்தினரும் கூடியதால் பலத்த பாதுகாப்புக்கு போலீஸார் ஏற்பாடு செய்திருந்தனர். ஒவ்வொரு மதத்தினரும் குறிப்பிட்ட நேரத்தில் வழிபட ஏற்பாடு செய்திருந்தனர். இதனால் எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் மூன்று மத நிகழ்ச்சிகளும் சுமூகமாக நடந்தன.