பட்ஜெட்: 'மடிப்பிச்சை'-வைகோ; 'ஆகா ஓஹோ'-சிதம்பரம்
சென்னை: தமிழக பட்ஜெட் பொருளாதாரப் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாத, மக்களை ஏமாற்றும் தந்திரமான பட்ஜெட் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக பட்ஜெட் வெறும் வார்த்தைகளின் வர்ணனைக் கோலம். மணம் தராத காகிதப் பூ மாலை. பொருளாதாரப் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாத, மக்களை ஏமாற்றும் தந்திரமான பட்ஜெட்.
அனைத்து துறைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கிட எந்த நடவடிக்கையும் இல்லை. விவசாயிகளின் துயரம் தணிக்க எந்த வழியும் செய்யப்படவில்லை.
பருப்பு, எண்ணெய் வகைகள் விலை உயர்வை அரசு கண்டுகொள்ளவில்லை. அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தப்பட்டது ஒன்றும் சாதனை இல்லை.
தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க உரிய அணுகுமுறை இல்லை. தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளான காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் பிரச்னைகளில் மத்திய அரசு நியாயமாக நடந்து கொள்ளாததும், தமிழகத்தை வஞ்சித்து வருவதும் கண்டனத்திற்குரியது.
மத்திய அரசில் இடம் பெற்றுள்ள திமுக, ஒப்புக்கு சப்பாணியாக, இந்த பட்ஜெட்டில் மத்திய அரசு பாராமுகமாக இருக்கக் கூடாது என்று மடிப்பிச்சை ஏந்துவது வெட்கக் கேடானது.
அரசின் தோல்விக்கான ஒப்புதல் வாக்குமூலம் தான் இந்த பட்ஜெட் என்று கூறி்யுள்ளார் வைகோ.
ப.சிதம்பரம் பாராட்டு:
இந் நிலையில் இளையான்குடியில் ஆந்திரா வங்கி கிளையை திறந்து வைத்துப் பேசிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்,
மத்திய அரசை பின்பற்றி தமிழக அரசும் விவசாயிகளுக்கான கடனை தள்ளுபடி செய்துள்ளது.
தமிழக அரசு வருவாய் பற்றாக்குறை இல்லாத உபரி பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. இது தமிழக வரலாற்றில் ஒரு திருப்பு முனை. எதிர்காலத்தில் தமிழகத்தில் வருவாய் பற்றாக்குறை இருக்காது.
மற்ற மாநிலங்களும் தமிழக அரசை முன்னோடியாக கொண்டு உபரி பட்ஜெட் தயாரிக்க வேண்டும் என்றார் சிதம்பரம்.












Click it and Unblock the Notifications