அரசு கூறும் புள்ளி விவரம் - கருணாநிதிக்கு விஜயகாந்த் கேள்வி
சென்னை: முதல்வர் சொல்லும் புள்ளி விவரத்தை நம்புவதா அல்லது அவர் தலைமையில் உள்ள திட்டக்குழு கூறும் புள்ளி விவரங்களை நம்புதா என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், படிப்பை பாதியிலேயே நிறுத்தும் பிள்ளைகளை பள்ளிக்கு கொண்டு வரவும் பள்ளிகளை சிறப்பாக நடத்தவும் பட்ஜெட்டில் எந்த புதிய திட்டமும் இல்லை என்று நான் கூறியிருந்தேன்.
ஆரம்ப பள்ளியில் சேரும் 93.5 சதவீதம் பிள்ளைகள், 10ம் வகுப்பு வரும்போது 51.65 சதவீதமாகவும் 12ம் வகுப்பு வரும்போது 27.82 சதவீதமாகவும் குறைந்து விடுகின்றனர். படிப்பை பாதியில் நிறுத்துவதும், பள்ளிகள் சரியாக இயங்காததும்தான் இதற்கு காரணம்.
படிப்பை பாதியிலேயே நிறுத்துவதைக் குறைக்கவும் பள்ளிகளின் தரத்தை உயர்த்தி தேர்ச்சி பெறுபவர்களின் விகித்தை அதிகரிக்க திட்டமிட்டால் கல்வித் துறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று மாநிலத் திட்டக்குழு உறுப்பினர் சீனிவாசனே குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மக்கள் தொகையில் 4ல் ஒரு பங்கினர் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். படிப்பை பாதியில் நிறுத்துவோரில் பெண்கள்தான் அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைவருக்கும் கல்வித் திட்டம் என்பது இந்திய அரசால் மாநிலங்களின் உரிய பங்கோடு செயல்படுத்தப்பட்டும் மேற்கூறிய நிலைதான் உள்ளது. பள்ளிகளில் பெருமளவில் பிள்ளைகள் கடைசி வரை படிக்காததற்கு என்ன காரணங்கள் என ஆராய்ந்து அவற்றைப் போக்கவும் திட்டக்குழு உறுப்பினர் சொல்வதைப் போன்று பள்ளிகளை சிறப்பாக நடத்தவும் இந்த நிதி நிலை அறிக்கையில் எந்த சிறப்புத் திட்டமும் வகுக்கப்படவில்லை. தற்போது ஒதுக்கப்பட்ட நிதியும் குறைவு.
தமிழக கல்வித் துறையின் நோயையும், அதற்கான காரணங்களையும் சொல்லிவிட்டு, மருந்து இல்லையே என்பதுதான் எனது குற்றச்சாட்டு. முதல்வர் சொல்லும் புள்ளிவிவரங்களை நம்புவதா? அவர் தலையில் உள்ள திட்டக்குழுவின் புள்ளி விவரங்களை நம்புதா?
முதல்வர் சொல்வதைப் போல நான் நிதி நிலை அறிக்கையை படிக்காமல் இருந்திருந்தால் எந்த பிரச்னையும் இல்லை. அரசின் புள்ளி விவரங்களை படிப்பதுதான் இப்போது பிரச்னையே. எதையும் படிக்காமல் பொத்தாம் பொதுவில் புழுதி வாரித் தூற்ற வேண்டிய அவசியமும் இல்லை. தமிழக மக்கள் எதிர்பார்க்கும் கல்விப் பிரச்னை தீர்ந்தால் எனக்குப் போதும்.
எதிர்க்கட்சி என்ற முறையில் குறைகளை சுட்டிக்காட்டுவது தேமுதிகவின் கடமை. ஆளும் கட்சியினர் அவற்றை களைவதன் மூலம் நல்லாட்சி ஏற்படும். மாறாக அவதூறு கற்பிக்க வேண்டும் என்ற நோக்கம் எங்களுக்கு சிறிதும் கிடையாது என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.