தமிழர்கள் நலனுக்காக பாடுபடுவேன்: மலேசிய அமைச்சர் சுப்ரமணியம்

மலேசியாவில் சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில் பிரதமர் படாவி தலைமையிலான பாரிசன் தேசிய கூட்டணிக்கு பெரும் அடி விழுந்தது. மலேசிய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரும் தோல்வியை சந்தித்தது பாரிசன் தேசிய கூட்டணி. இருப்பினும் பெரும்பான்மை பலம் பெற்றதால் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.
மீண்டும் படாவியே பிரதமராகியுள்ளார். சமீபத்தில் தனது அமைச்சரவைப் பட்டியலை அவர் வெளியிட்டார். அமைச்சரவையில் நான்கு தமிழர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.
இதில் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக கேபினட் அந்தஸ்தில் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மட்டுமே கேபினட் அமைச்சர் ஆவார்.
கே.தேவமணி (பிரதமர் அலுவலக துணை அமைச்சர்), ஏ.கோகிலன் (தோட்டத் தொழில்துறை துணை அமைச்சர்), சரவணன் (வெளியுறவு வர்த்தக துணை அமைச்சர்) ஆகியோர் துணை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் டாக்டர் சுப்ரமணியம் கோலாலம்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவர் கூறுகையில், ஆளுங் கூட்டணியுடன் இணைந்து தமிழர்களின் உயர்வுக்காக மலேசிய இந்திய காங்கிரஸ் தொடர்ந்து பாடுபடும். ஆளும் பாரிசன் தேசிய கூட்டணியில் நாங்களும் முக்கிய அங்கம் வகிக்கிறோம்.
வாழ்வோ, சாவோ, உயர்வோ, தாழ்வோ, பாரிசன் தேசிய கூட்டணியுடன்தான் மலேசிய இந்திய காங்கிரஸ் இருக்கும். இத்தனை காலமாக இருவரும் இணைந்தே செயல்பட்டு வந்துள்ளோம். இந்த கூட்டணி எதிர்காலத்திலும் தொடரும்.
மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரிடையே நிலவும் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
எனது அமைச்சகம் மூலமாக, தமிழ் இளைஞர்களுக்கு பிற இனத்தவரோடு போட்டி போட்டு வேலைகளைப் பெறுவதற்கேற்ற தகுதிகளை வளர்த்துக் கொள்ள உரிய பயிற்சிகள் அளிக்கத் திட்டமிட்டுள்ளேன் என்றார் சுப்ரமணியம்.
இதற்கு முன்பு மலேசிய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஒரே கேபினட் அமைச்சர் டத்தோ சாமிவேலுதான். கடந்த 30 வருடங்களாக அவர்தான் மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் அசைக்க முடியாத தலைவராக இருந்து வந்தார்.
ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் தோல்வியுற்றதால் அமைச்சராக முடியாமல் போய் விட்டது. இதுதான் அவர் பெறும் முதல் தேர்தல் தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications