3வது அணி உருவாக வேண்டும்-பரதன்
ஹைதராபாத்: காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளின் தலைமையிலான கூட்டணிகளுக்கு மாற்றாக 3வது அணியை அமைக்க முயற்சிக்க வேண்டும். அதையும் பொதுத் தேர்தலுக்கு முன்பே அமைப்பது அவசியம் என்று இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பரதன் கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாடு ஹைதராபாத்தில் தொடங்கியது. 4 நாட்கள் நடக்கும் இம்மாநாட்டை பொதுச் செயலர் பரதன் தொடங்கி வைத்துப் பேசுகையி்ல்,
காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளின் தலைமையிலான கூட்டணிகளுக்கு மாற்றாக 3வது அணியை அமைக்க முயற்சிக்க வேண்டும்.
விவசாயிகள் தற்கொலை, விலைவாசி உயர்வு போன்ற பல பிரச்சனைகளில் நாடு சிக்கித் தவிக்கிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் பொதுத் தேர்தலுக்கு முன்பே 3வது அணியை அமைப்பது அவசியம்.
இடதுசாரிகளுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. நாடாளுமன்றத்தில் நமக்குள்ள வலிமையை திறம்பட பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
தனியாரிடம் அரசுத் துறைகளை தாரைவார்ப்பது, சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை ஊக்குவிப்பது நாட்டுக்கு நல்லதல்ல.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது. அணுசக்தி ஒப்பந்தத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கான எந்த அம்சமும் இல்லை. இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும்.
பாஜக தலைமையிலான சில சக்திகள் அமெரிக்காவுடன் உறவு பாராட்டத் துடிக்கிறது. அந்நாட்டுடனான நட்பு வேறு. நம் நலன்களை அடகு வைப்பது வேறு. இது நம்நாட்டை மீண்டும் காலனியாதிக்க நாடாக மாற்றிவிடும் என்றார்.
மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் பிரகாஷ்காரத், புரட்சிகர சோஷியலிஸ்ட் கட்சி, பார்வார்டு பிளாக் கட்சி ஆகிய தோழமை கட்சிகளின் தலைவர்களும், சீனா, கியூபா, வட கொரியா, நேபாளம், அமெரிக்கா, செக் குடியரசு, ஜப்பான் உள்பட 30 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகளும் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.