தீ விபத்தில் படுகாயம்-சிறுமிக்கு உதவிய ஜெயலலிதா
மேட்டூர் அருகே கோபி நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ராமன். இவரது மகள் ஷாலினி (வயது 9) நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.
சமீபத்தில் வீட்டில் ஷாலினி அடுப்பு பற்ற வைத்தார். அப்போது அடுப்பிலிருந்து தீ ஷாலினி மீது பரவியது.
மிக பலத்த காயமடைந்த அச் சிறுமி மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால், உரிய சிகிச்சை அளிக்க சிறுமியை தனியார் மருத்துவமனையில் சேர்க்க அவரது பெற்றோர் திட்டமிட்டனர். ஆனால், அதற்கான வசதி இல்லாததால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்தனர்.
இந்தச் செய்தியை தொலைக்காட்சியில் பார்த்த ஜெயலலிதா, அச் சிறுமியின் முழு மருத்துவ செலவையும் ஏற்க முன் வந்தார்.
இது தொடர்பாக சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு உத்தரவு பறந்தது. இதையடுத்து அந்த சிறுமியை அதிமுகவினரே தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமியின் உடல் நலம்-முன்னேற்றம் குறித்து தனக்கு தினந்தோறும் தகவல் தர வேண்டும் என மாவட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சிகிச்சை செலவு தொடர்பான பில்லை தனக்கு அனுப்பி வைக்குமாறு தனியார் மருத்துவமனையையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.