விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் ஸ்டாலின் ஆய்வு
மதுரை: தென் மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறினார். நிவாரண நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.
முதல்வர் கருணாநிதியின் உத்தரவுப்படி நேற்று அமைச்சர்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டனர்.
உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளப் பகுதிகளைப் பார்வையிட்டார்.
சென்னையிலிருந்து மதுரை சென்ற ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் விருதுநகர் சென்றார். அங்கு திருக்குளம் கண்மாய் அருகே நீரில் மூழ்கிக் கிடந்த 300 ஏக்கர் வயலைப் பார்த்தார். அங்கு கூடியிருந்த மக்கள் நெற் பயிரை ஸ்டாலினிடம் காட்டி கதறி அழுதனர். அவர்களுக்கு ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
பின்னர் உப்படை அருகே வெள்ளத்தில் சிக்கி பலியான முத்துக்கிருஷ்ணன் என்ற சிறுவனின் குடும்பத்தினரைப் பார்த்து ஆறுதல் கூறிய ஸ்டாலின், அரசின் ரூ. 1 லட்சம் நிவாரணத் தொகையை சிறுவனின் குடும்பத்தினருக்கு வழங்கினார்.
பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர், கடம்பன்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் ஸ்டாலின் சென்றார். அவருடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரசேகரன், எஸ்.பி. செந்தில்குமார் உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.
ராஜபாளையத்திற்கு வந்த ஸ்டாலின் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், மழையால் தேனி, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் பெய்திராத மழை இது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பல்வேறு அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பார்வையிட்டு வருகின்றனர்.
பாதிப்பை சந்தித்துள்ள மக்களுக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படும். சேதமடைந்த சாலைகள், குளங்கள், கண்மாய்கள் சீரமைக்கப்படும்.
விருதுநகர் மாவட்ட ஆய்வை முடித்துக் கொண்ட பின்னர் தூத்துக்குடிக்குச் சென்றார் ஸ்டாலின். முத்தம்மாள் காலனி என்ற இடத்தில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி இருந்தது. அங்கு இறங்கி நடந்தபடி வெள்ள பாதிப்பை ஆய்வு செய்தார். மக்களிடம் குறைகளைக் கேட்டார். மனுக்களைப் பெற்றுக் கொண்டார். ஆறுதல் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், ஆழ்வார்திருநகர், குறும்பூர் உள்ளிட்ட இடங்களுக்கும் ஸ்டாலின் சென்றார்.
ஸ்டாலினுடன் அமைச்சர் கீதா ஜீவன், மத்திய அமைச்சர் ராதிகா செல்வி, தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமி உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.
இன்று நெல்லை மாவட்டத்திலும், நாளை ராமநாதபுரம் மாவட்டத்திலும் வெள்ள பாதிப்பை ஸ்டாலின் பார்வையிடுகிறார்.
இதேபோல மதுரையில் தமிழரசி, ராமநாதபுரத்தில் சுப. தங்கவேலன், திருச்சியில் கே.என்.நேரு, திண்டுக்கலில் ஐ.பெரியசாமி, சிவகங்கையில் பெரியகருப்பன், கடலூர், நாகையில் பன்னீர் செல்வம், திருவாரூரில் ஆற்காடு வீராசாமியும், காஞ்சிபுரத்தில் துரைமுருகன், தா.மோ. அன்பரசன் ஆகியோரும் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டனர்.












Click it and Unblock the Notifications