குமரிக் கடலில் புதுப் புயல் சின்னம்-மழை தொடரும்
சென்னை: வங்கக் கடலில் மன்னார் வளைகுடா பகுதியில் புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் இன்றும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரள கடற்கரைக்கு அப்பால் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வந்தது. இதனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தை மழை வாரிச் சுருட்டி வந்தது. இந்தப் புயல் சின்னம் நேற்று முற்றிலும் வலுவிழந்தது. இருப்பினும் அதே இடத்தில் அது இருந்ததால், நேற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் கன மழை கொட்டியது.
இந்தப் புயல் சின்னம் தற்போது முற்றிலும் மறைந்து விட்டது.
ஆனால் வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் ஒன்று உருவாகியுள்ளது.
இதனால் இன்றும் தென் மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இந்த புயல் சின்னம் வலுவிழந்த நிலையில் இருப்பதால் மிதமான மழையே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.