2ம் வகுப்பு மாணவன் மண்டையை உடைத்த ஆசிரியை
கோவை: பரீட்சை எழுதாமல் யோசித்துக் கொண்டு அமர்ந்திருந்ததற்காக 2ம் வகுப்பு மாணவனை அவனது பரீட்சை எழுதும் அட்டையால் தலையில் அடித்தார் ஆசிரியை. இதில் அந்த சிறுவனின் தலையில் இருந்து ரத்தம் கொட்டியது.
கோவை பீளமேட்டில் உள்ள ராமன் செட்டியார் நினைவு மேல் நிலைப் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஜெனித் குமார் (8). கடந்த 19ம் தேதி இவனுக்கு வகுப்புத் தேர்வு நடந்தது.
அப்போது வேகமாக பரீட்சை எழுதாமல் யோசித்தபடி இருந்துள்ளான் ஜெனித் குமார். இதனால் கோபமடைந்த ஆசிரியை அமுதா, அவன் வைத்திருந்த பரீட்சை எழுதும் பேடை வாங்கி ஓங்கி தலையில் அடித்துள்ளார்.
இதில் ஜெனித்குமாரின் தலையில் ரத்தக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து இதை வீட்டில் சொல்லக் கூடாது என்று ஆசிரியை எச்சரித்துள்ளார். இதனால் ஜெனித் வீட்டில் சொல்லவில்லை. தலையில் காயம் ஏற்பட்டிருப்பதைப் பார்த்த பெற்றோர் என்னவென்று கேட்டபோது பள்ளி கழிப்பறைக்குச் சென்றபோது வழுக்கி விழுந்து விட்டதாக அவன் தெரிவித்தான்.
ஆனால் சந்தேகமடைந்த பெற்றோர் வலியுறுத்திக் கேட்டபோது ஆசிரியை அமுதா பேடால் அடித்து விட்டதாக தெரிவித்துள்ளான் ஜெனித். இதையடுத்து ஜெனித்தை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜெனித்துக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸிலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சர்ச்சையில் சிக்கிய ஆசிரியை அமுதாவை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
இந்த ஆண்டில் கோவையில் நடைபெறும் 3வது சம்பவம் இது. கடந்த ஜனவரி மாதம் பிளஸ்டூ மாணவனை அடித்ததாக ஒரு ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சமீபத்தில் இரட்டை ஜடை போடாமல் வந்ததற்காக ஒரு மாணவியின் தலைமுடியை கத்தரித்து ஒரு ஆசிரியை சர்ச்சையில் சிக்கி பின்னர் கைது செய்யப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.