சேதுவை கெடுக்க முயலும் 'கேது'- திமுக தாக்கு
சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது.
விவாதத்தை அதிமுக எம்எல்ஏ திருத்தணி ஹரி துவக்கி வைத்து பேசுகையில்,
புரட்சித் தலைவி ஜெயலலிதா உழவர் பாதுகாப்பு திட்டத்தை கொண்டு வந்து ரூ. 201.56 கோடியை ஒதுக்கினார். ஆனால், இந்த பட்ஜெட்டில் அந்தத் திட்டத்துக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. விவசாயிகள் நன்றி பெருக்கோடு ஜெயலலிதாவின் ஆட்சியில் கிடைத்த நன்மைகளை எண்ணிப் பார்க்கிறார்கள்.
நதி நீர் இணைப்புக்கு குரல் கொடுத்தவர் புரட்சி்த் தலைவி ஜெயலலிதா தான். சத்துணவுத் திட்டத்தை விரிவாக்கியது, இலவச பாட திட்டங்கள், இலவச சைக்கிள் போன்றவைகளை வழங்கியவர் புரட்சித் தலைவி அம்மா தான்.
இருண்டு கிடந்த தமிழகத்தை ஒளி பெறச் செய்தவர் புரட்சித் தலைவி. ஆனால் இன்று மின்சார தட்டுப்பாட்டால் தமிழகம் இருளில் கிடக்கிறது.
2 ரூபாய்க்கு வினியோகிக்கப்படும் ரேசன் அரிசி பக்கத்து மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. அதிமுக ஆட்சியில் தரமான அரிசி வழங்கப்பட்டது. அரிசி கடத்தலின் பின்னணியில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புரட்சித் தலைவி ஆட்சியில் பழைய ரேசன் கார்டுகளை புதுப்பித்து உடனே கொடுத்தார்கள். இன்று ரேசன் கார்டு கிடைக்காமல் பலர் தவித்து வருகிறார்கள்.
விண்ணப்பித்தவர்களுக்கு உடனே ஆய்வு செய்து ரேசன் கார்டு வழங்க வேண்டும். சொந்த நிலத்தில் குடியிருப்பவர்கள் கூட வீட்டுமனை பட்டா வாங்க அல்லப்படுகிறார்கள்.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என இந்த அரசு கூறுகிறது. ஆனால் மின்னணு எந்திரம் மூலம் வழங்கப்படும் பஸ் டிக்கெட் கூட ஆங்கிலத்தில் தான் உள்ளது. டாடா, ரிலையன்ஸ் போன்ற அனைத்து நிறுவனங்களின் விளம்பர பலகைகள் ஆங்கிலத்தில் தான் உள்ளன என்றார்.
இதையடுத்து பேசிய திமுக உறுப்பினர் ராஜ கண்ணப்பன்,
ஒட்டு மொத்த தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் பட்ஜெட் இது என மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரமே கூறி இருக்கிறார். பல பத்திரிகைகளும் பாராட்டி உள்ளது. ஆனால் சிலர் குறை சொல்ல வேண்டும் என்பதற்காக குற்றம் சொல்கிறார்கள்.
மக்களின் ஏற்றத் தாழ்வுகளை சீரமைக்கிற பட்ஜெட் இது. மின்சார பற்றாக்குறையை கோடை காலத்தில் கூட சமாளிக்க இந்த அரசு தயாராக உள்ளது.
தமிழ்நாட்டில் ஓடும் ஆறு களை இணைக்கும் முன்னோடி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற ஜப்பான் நாட்டு உதவியோடு ரூ.1330 கோடி மதிப்பில் திட்டம் தீட்டி நிதியை பெற்று வந்துள்ளது இந்த அரசு தான்.
கடந்த 2 ஆண்டில் தகவல் தொழில்நுட்பத்த் துறையில் 46 சதவீதம் முன்னேறி இருக்கிறோம். எந்த துறையிலும் நாம் பின்தங்கவில்லை. சிலருக்கு ஜோசியத்தில் நம்பிக்கை இருக்கும்.
சேது சமுத்திரத் திட்டம் தற்போது நிறைவேறி வருகிறது. பொதுவாக ஜோதிடத்தில் கேது என்று ஒரு ராசி இருக்கும். அது கெடு பலன்களைத்தான் கொடுக்கும். அதேபோல் சில கேதுகள் இந்த திட்டத்தை கெடுத்துக் கொண்டு உள்ளன. அந்த கிரகம் சிக்கிரம் விலகும்.
திமுக ஆட்சியில் டெஸ்மா, எஸ்மா சட்டங்கள் இல்லை. யாரையும் தேவையில்லாமல் ஜெயிலில் போடவில்லை.
பட்ஜெட்டில் வார்த்தை ஜாலம் எதுவும் கிடையாது. அனைத்துக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது எம்ட்டி' பட்ஜெட் அல்ல, சேப்டி' பட்ஜெட் என்றார்.
கண்ணப்பன் பேசுகையி்ல் அதிமுகவினர் எழுந்து பேச முயன்றனர். ஆனால் யாரையும் குறுக்கிட வேண்டாம் என்று சபாநாயகர் கேட்டுக் கொண்டார்.