கணவர் கண் எதிரில் ஓடும் பஸ்சில் நர்ஸ் மானபங்கம்
கரூர்: கரூர் அருகே ஓடும் பேருந்தில், கணவரின் கண் எதிரிலேயே நர்ஸ் ஒருவர் மானபங்கப்படுத்தப்பட்டார். அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முயலாத, பேருந்தின் நடத்துநர், அப்பெண்ணையும், கணவர் உள்ளிட்டோரையும் கீழே தள்ளி இரக்கமில்லாமல் நடந்து கொண்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள். 38 வயதாகும் இவர் கரூர் மாவட்டம் கட்டளை துணை சுகாதார நிலையத்தில் கிராமப்புற செவிலியராக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் காந்திராஜன்.
கடந்த வியாழக்கிழமையன்று வள்ளியம்மாள் தன்னுடன் பணியாற்றும் கள் பணியாளர் ஞானேஸ்வரி மற்றும் காந்திராஜனுடன் சின்ன சேங்கல் கிராமத்தில் சிறுவர்கள் நலவாழ்வு திட்டப் பணியை மேற்கொண்டு விட்டு புலியூர் வந்தார்.
அங்கிருந்து வீராக்கியம் என்ற கிராமத்திற்குச் செல்வதற்காக டவுன் பஸ்சில் ஏறியுள்ளனர். பேருந்து கிளம்பியபோது நான்கு பேர் ஒடி வந்து பேருந்தில் ஏறினர்.
அனைவரும் நல்ல குடிபோதையில் இருந்தனர். நால்வரும் சேர்ந்து வள்ளியம்மாளின் சேலையைப் பிடித்து இழுத்து, அவரை மானபங்கப்படுத்தினர். இதைத் தடுக்க முயன்ற காந்திராஜனை அவர்கள் தாக்கினர். கணவர் கண் முன்பாகவே வள்ளியம்மாள் மானபங்கப்படுத்தப்பட்டார்.
பேருந்தில் இருந்த பயணிகள் சத்தம் போட்டு பஸ்சை காவல் நிலையத்திற்கு செலுத்துமாறு கூறினார். ஆனால் அதை நடத்துநர் கண்டு கொள்ளவில்லை. டிரைவரும் கண்டுகொள்ளவில்லை. பேருந்து நடத்துநர் ராஜேந்திரனின் உறவினர்கள்தான் இந்த நான்கு பேர் கொண்ட கும்பல் என்று தெரிகிறது.
பின்னர் நான்கு பேரும் இறங்கி ஓடி விட்டனர். அதன் பின்னர் பேருந்தை நிறுத்திய ராஜேந்திரன், வள்ளியம்மாள், காந்திராஜன், ஞானேஸ்வரி ஆகியோரை வலுக்கட்டாயமாக பேருந்திலிருந்து இறக்கி விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த காந்திராஜன் தனது மனைவியை மருத்துவமனையில்சேர்த்தார். பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்தார். ஆனால் புகாரைப் பெற்றுக் கொண்ட போலீஸார், முதல் தகவல் அறிக்கையை இதுவரை பதிவு செய்யவில்லையாம்.
நடத்துநர் ராஜேந்திரனை அழைத்து விசாரித்துள்ளனர். அதேபோல ஒருவரைக் கூட்டி வந்து அடையாளம் காட்டுமாறு வள்ளியம்மாளிடம் கேட்டுள்ளனர். ஆனால் அவர் இல்லை என்று வள்ளியம்மாள் கூறி விட்டார்.
பலாத்காரம் செய்த கும்பல் தொடர்ந்து தலைமறைவாக உள்ளது. அரசுப் பேருந்தின் நடத்துநரே, இப்படி ஒரு கொடுமைக்கு உடந்தையாக இருந்தது கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வள்ளியம்மாளை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் காயப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கிராமப்புற செவிலியர் சங்க மாநிலத் தலைவர் நிர்மலா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதை வலியுறுத்தி வருகிற 27ம் தேதி கரூர் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.