சீனாவுக்கு எதிர்ப்பு: கமல்நாத்தின் பெய்ஜிங் பயணம் ரத்து

திபெத்தில் கடந்த ஒரு மாத காலமாக தீவிர போராட்டம் நடந்து வருகிறது. அடக்குமுறையைக் கையாண்டு இதை ஒடுக்க முனைந்துள்ளது சீன அரசு. ஆனால் திபெத்தியர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் என்ன செய்வது என்று தெரியாமல் சீனா விழித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள சீனத் தூதரகத்திற்குள் புகுந்த திபெத்தியர்கள், அங்கிருந்த சீனக் கொடியை கீழிறக்கி தங்களது கொடியை ஏற்ற முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி திபெத்தியர்கள் உள்ளே புகுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் போலீஸார் துரிதமாக செயல்பட்டு திபெத்தியர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.
ஆனால் திபெத்தியர்களை சீன தூதரகத்திற்குள் நுழைய அனுமதித்தது குறித்து அதிருப்தி தெரிவித்த சீன வெளியுறவுத்துறை, பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதர் நிரூபமா ராவை இருமுறை அழைத்து தனது கண்டனத்தை தெரிவித்தது. அதிலும் ஒருமுறை நள்ளிரவில் நிரூபமா ராவ் அழைத்து கண்டனம் தெரிவித்தது சீனா.
மேலும், சீனாவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதி ஓட்டம், இந்தியாவில் சரிவர நடக்குமா, ஒலிம்பிக் ஜோதிக்கு பாதுகாப்பு இருக்குமா என்றும் சந்தேகம் தெரிவித்தது.
சீனாவின் இந்த செயலுக்கு இந்திய அரசு எந்த ரியாக்ஷனும் காட்டாமல் இருந்து வந்தது. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. இது மிகவும் வெட்க்கேடான செயல் என்று பாஜக வர்ணித்திருந்தது.
இந்த நிலையில் சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அடுத்த மாதம் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் கமல்நாத் சீனா செல்வதாக இருந்தது. அந்தப் பயணத்தை ரத்து செய்து விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே, டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், ஒலிம்பிக் ஜோதிக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். அதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் 20 நகரங்களுக்கு ஜோதி கொண்டு செல்லப்படும். செல்லும் இடங்களில் எல்லாம் போதுமான பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே சீனா இதுகுறித்து கவலை கொள்ளத் தேவையில்லை என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications