தா.கி கொலை வழக்கு சாட்சியை மிரட்டுகிறார் அழகிரி - ஜெ. புகார்

இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், தா.கிருட்டிணன் கொலை வழக்கில் தனது மகனைக் காப்பாற்ற, எப்படியாவது தப்பிக்க வைக்க வேண்டும் என்பதில் முதல்வர் கருணாநிதி குறியாக இருக்கிறார்.
தா.கி. கொலை வழக்கை மதுரை நீதிமன்றம் விசாரித்தால், முக்கிய குற்றம் சாட்டப்பட்டவர் தப்பிக்கலாம், அவரது தந்தை முதல்வராக இருப்பதால் இந்த வழக்கை மதுரையில் விசாரிக்கக் கூடாது என்று கூறி சித்தூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் மாற்றியது.
இந்த வழக்கில் திருமங்கலம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ முத்துராமலிங்கம் அரசுத் தரப்பில் முக்கிய சாட்சியாக உள்ளார். அவர் ஏப்ரல் 1ம் தேதி சித்தூர் நீதிமன்றத்தில் சாட்சி சொல்லவுள்ளார்.
ஆனால் அழகிரிக்கு எதிராக சாட்சி சொல்லக் கூடாது என்பதற்காக அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி அவரை அழகிரி மிரட்டுகிறார். மதுரை அவனியாபுரம் வாசுகி தெருவில் வசிக்கும் கணேசன் என்பவர் கடந்த 22ம் தேதி கத்தியால் குத்தப்பட்ட வழக்கில், முத்துராமலிங்கத்தின் மகன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மதுரை நீதிமன்றத்தில் அவர் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு நிலுவையில் இருக்கும்போது, மரபை மீறி டிஎஸ்பி ஒருவர் முத்துராமலிங்கத்தின் வீட்டுக்குச் சென்று அவரது மகனை ஒப்படைக்குமாறு மிரட்டியுள்ளனர். இல்லாவிட்டால் உங்களைக் கைது செய்வோம் எனவும் மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து மனித உரிமைக் கழகம், டிஜிபி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனக்கு எதிராக முத்துராமலிங்கம் சாட்சி சொல்லக் கூடாது என்பதற்காக அவரை அழகிரி மிரட்டுகிறார். இதற்கு முதல்வர் கருணாநிதியும் உடந்தையாக இருக்கிறார்.
இந்தக் கூட்டுச் சதியால், முத்துராமலிங்கத்திற்கும், அவரது குடும்பத்தினருக்கும் பெரும் ஆபத்து நேரிட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
முத்துராமலிங்கத்திற்கோ அல்லது அவரது குடும்பத்தினருக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டால் அதற்கு முதல்வர் கருணாநிதிதான் பொறுப்பேற்க வேண்டும்.
இந்த சட்டவிரோத நடவடிக்கை தொடர்ந்தால், அதை சட்டரீதியாக, உச்சநீதிமன்றத்திற்குக் கொண்டு செல்ல அதிமுக தயங்காது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications