தமிழகத்தில் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 8 மடங்கு அதிக மழை
இத் தகவலை சட்டசபையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
மழை வெள்ள நிவாரணம் தொடர்பாக நடந்த விவாதத்தி்ன்போது பேசிய ஸ்டாலின்,
தமிழகத்தில் கடந்த 10ம் தேதி முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் மார்ச் முதல் மே மாதம் வரை கோடை காலம். இக்காலத்தில் பொதுவாக அதிக மழை பெய்வதில்லை. மார்ச் மாதத்தில் தமிழகத்தில் சராசரியாக பெய்ய வேண்டிய மழை அளவு 19.9 மில்லி மீட்டர் தான்.
ஆனால், இந்த ஆண்டு 158.03 மி.மீ மழை பெய்துள்ளது. இது 8 மடங்கு அதிகம்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 358.00 மி.மீயும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 315.39 மி.மீயும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 295.23 மி.மீயும், தூத்துக்குடி மாவட்டத்தில் 253.86 மி.மீயும், விருதுநகர் மாவட்டத்தில் 250.11 மி.மீயும், சிவகங்கை மாவட்டத்தில் 246.51 மி.மீயும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 244.45 மி.மீயும், நீலகிரி மாவட்டத்தில் 225.55 மி.மீயும், தேனி மாவட்டத்தில் 223.45 மி.மீயும், கடலூர் மாவட்டத்தில் 220.90 மி.மீயும் மழை பெய்துள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் அதிகபட்சமாக 236.00 மி.மீ மழை பெய்துள்ளது.
மாநிலம் முழுவதும் 3,097 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 77 கிராமங்கள் தண்ணீரால் சூழப்பட்டன. இம்மழையால் பாதிக்கப்பட்ட 10,278 பேர் 41 மையங்களில் தங்க வைக்கப்பட்டு 38,038 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த கால்நடைகளின் எண்ணிக்கை 804.
மாநிலம் முழுவதும் முதற்கட்ட மதிப்பீட்டின்படி 47,257 ஹெக்டேர் நிலப்பரப்பில் நெற்பயிர்களும், 2,79,143 ஹெக்டேர் நிலப்பரப்பில் தானியம் மற்றும் பருப்பு வகை பயிர்களும்,
62,882 ஹெக்டேர் நிலப்பரப்பில் தோட்டக்கலை பயிர்களும் 41,068 ஹெக்டேர் நிலப்பரப்பில் இதர பயிர்களும் ஆக மொத்தம் 4,30,350 ஹெக்டேர் என மொத்தம் 10,62,965 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
9,863 கி.மீ நீளத்திற்கு சாலைகளும், 945 சிறுபாலங்கள் மற்றும் பாலங்களும், 747 குளங்கள் மற்றும் வாய்க் கால்களும் மழையால் சேதமடைந்துள்ளன என்றார் ஸ்டாலின்.