சென்னை விமான நிலைய விரிவாக்கம்-உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்காக விமான நிலையத்தை ஒட்டியுள்ள, ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவின் கீழ் வரும் மணப்பாக்கம், கெருகம்பாக்கம், தரப்பாக்கம், கொளப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் அடங்கியுள்ள 1070 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த கடந்த ஆண்டு ஜூலை 19ம் தேதி தமிழக அரசு அனுமதி அளித்தது.
மேலும், க்ரீன்பீல்டு விமான நிலையத்தை அமைப்பதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4720 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தவும் தமிழக அரசு முடிவு செய்தது. இப்பகுதிகளில் கட்டடங்கள் கட்ட தடையும் விதிக்கப்பட்டது.
தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டனர். பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் தமிழக அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இந்த நிலையில் நிலம் கையகப்படுத்தும் தமிழக அரசின் அனுமதியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நில உரிமையாளர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் ஆகியோர் அடங்கிய முதலாவது பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
இன்று இவ்வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பில், சென்னை விமான நிலைய விரிவாக்க திட்டத்துக்கு தடை இல்லை. சென்னை நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டியது அவசியமாகும்.
நாட்டின் மற்ற பெருநகர விமான நிலையங்களுடன் ஒப்பிடுகையில் சென்னை விமானநிலையம் மிகவும் பின் தங்கி உள்ளது. சிறிதாக உள்ளது. எனவே விமான நிலைய விரிவாக்க திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான இடத்தை தமிழக அரசு தாராளமாக கையகப்படுத்திக் கொள்ளலாம். இடங்களை காலி செய்பவர்களுக்கு உரிய மாற்று ஏற்பாடுகள் செய்து தரப்பட வேண்டும்.
விமான நிலைய விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள இடத்தில், ஒரு தனியார் பள்ளி வருகிறது. அந்தப் பள்ளிக்கும் மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வதற்கு வசதியாக ஒரு மாதத்திற்கு தீர்ப்பு தள்ளி வைக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications