டெல்லியில் பிரதமர் வீடு அருகே துப்பாக்கிச் சூடு
டெல்லி: டெல்லியில், பிரதமர் மன்மோகன்சிங்கின் அதிகாரப்பூர்வ இல்லம் அருகே இன்று பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடந்தது. இருப்பினும் காவலர் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக சுட்டு விட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
டெல்லி, 7, ரேஸ்கோர்ஸ் சாலையில் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகம் உள்ளது.
இதற்கு சற்று அருகே பாதுகாப்புப் பணியில் டெல்லி ஆயுதப் படை போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். இன்று பிற்பகலில் ஒரு காவலரின் துப்பாக்கி தவறுதலாக சுட்டுள்ளது. இதில் அருகில் இருந்த காவலரின் தொடையில் குண்டு பாய்ந்து அவர் காயமடைந்தார்.
இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உயர் அதிகாரிகள் விரைந்து வந்தனர். விசாரணையில் தவறுதலாக துப்பாக்கி சுட்டு விட்டது தெரிய வந்தது.
இருப்பினும் அந்தக் காவலரை அங்கிருந்து விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்றனர். காயமடைந்த காவலர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.