கொல்லிமலையில் தடுப்பணை-மின் உற்பத்தி: தமிழக அரசு முடிவு
சென்னை: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே கொல்லிமலையில் தடுப்பணை கட்டி மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் செயல்படுத்தபட உள்ளது. ரூ. 63.41 கோடி செலவில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என தமிழக சட்டசபையில் மின்சாரத்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது பதில் அளித்து அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசுகையில்,
தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் 2 அல்லது 3 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய வாய்ப்பு கிடைத்தாலும் அதை செயல்படுத்த மின்சார வாரியம் தயாராக இருக்கிறது. அதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறியும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.
ஓகேனக்கல் நீர்மின் திட்டம் மூலம் 150 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஆனால் கர்நாடக அரசு காவிரி பிரச்னை தீராததை காரணம் காட்டி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
கர்நாடக மாநிலத்திலும் ஒரு சில மின் திட்டங்களை செயல்படுத்த முயற்சி செய்து வருகிறார்கள். இரு மாநில திட்டங்களையும் மத்திய நீர் மின் உற்பத்தி நிறுவனம் ஏற்று மின் உற்பத்தி செய்ய முன் வந்துள்ளது.
ஆனால் மின்சாரத்தை இரு மாநிலங்களும் பகிர்ந்து கொள்வதில் உடன்பாடு ஏற்படவில்லை. இது குறித்து மத்திய அரசு பேச்சு நடத்தி வருகிறது.
மேலும், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி கொல்லிமலையில் தடுப்பணை கட்டி மின் உற்பத்தி செய்யும் திட்டம் செயல்படுத்தபட உள்ளது. 63 கோடியே 41 லட்சம் ரூபாய் செலவில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.
இதற்காக வனத்துறையிடம் இருந்து 7.1 ஏக்கர் நிலம் பெற வேண்டி உள்ளது. அதற்கு ஈடாக தமிழக அரசு 14.2 ஏக்கர் நிலம் தரவேண்டும். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த திட்டம் மூலம் 20 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
2009-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குள் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு மின் உற்பத்தி தொடங்கும் என்றார் ஆற்காடு.