சிறையில் சித்திரவதை-கைதி கணேசனை வேறு சிறைக்கு மாற்ற உத்தரவு

வேலூர் சிறையில் கற்பழிப்பு வழக்கில் கைதாகி தண்டனை அனுபவித்து வரும் கைதி கணேசன் சமீபத்தில் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில் தனது மனைவி நதியாவை, சிறை துணை ஜெயிலரும், வார்டன்களும் சேர்ந்து கற்பழித்து விட்டதாக கூறியிருந்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம் நதியாவை கண்டுபிடித்து ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டது.
நதியாவை திருப்பூரில் மீட்ட போலீஸார் உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு புதிய திருப்பமாக, அவருக்கு கல்யாணமே ஆகவில்லை என்று நதியாவின் தாயார் தெரிவித்தார். மேலும், நதியா கன்னித்தன்மை கழியாதவர் என்று போலீஸார் அறிக்கைதாக்கல் செய்தனர்.
இதையடுத்து கணேசனின் வக்கீல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிமன்றம் இந்த வழக்கை பைசல் செய்தது.
இந்த நிலையில் இன்னும் ஒரு திருப்பமாக, நதியா, கணேசனுக்கு எழுதி காதல் ரசம் சொட்டும் கடிதங்களும், இருவரும் கல்யாண கோலத்தில் இருக்கும் படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இதையடுத்து உண்மை கண்டறியும் குழு ஒன்று விசாரணையில் இறங்கியது. இந்தக் குழுவைச் சேர்ந்த வக்கீல்கள், கணேசனை சிறையில் சந்திக்க முயன்றபோது அனுமதி கிடைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து கணேசனின் வழக்கறிஞர் அய்யப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல் செய்தார். அதில் சிறையில் தனிமைச் சிறையில் கணேசன் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு உணவு சரிவர தரப்படுவதில்லை. சித்திரவதைக்கும் ஆட்படுத்தப்படுகிறார் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு வேலூர் மாவட்ட நீதிபதிக்கு உத்தரவிட்டது. மாவட்ட நீதிபதியும் சிறைக்குச் சென்று விசாரணை நடத்தினார். அதன் பின்னர் இன்று அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதில் கணேசன் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும், சித்திரவதை செய்யப்படுவதும் உண்மைதான் என்று தெரிவித்திருந்தார்.
இன்று அய்யப்பன் தாக்கல் செய்த மனு மீண்டும் நீதிபதிகள் முருகேசன், பெரியகருப்பையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வேலூர் மாவட்ட நீதிபதியின் அறிக்கையைப் பரிசீலித்த நீதிபதிகள், கணேசனை உடனடியாக வேறு சிறைக்கு மாற்ற உத்தரவிட்டனர். அவருக்கு தரமான உணவு, தேவையான மருத்துவ வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
கைதி கணேசனை அவரது வழக்கறிஞர் அய்யப்பன் நேரில் பார்க்க சிறை நிர்வாகம் அனுமதி தர வேண்டும் எனவும் தங்களது உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
மேலும், கணேசன் சித்திரவதை செய்யப்பட்டது குறித்து வேலூர் மாவட்ட எஸ்.பி, வேலூர் மத்திய சிறைக் கண்காணிப்பாளர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்த கட்டண விசாரணை ஏப்ரல் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கணேசன் சித்திரவதை செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதால் மீண்டும் கணேசன், நதியா விவகாரம் வெடித்துக் கிளம்பும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications