மே 28ம் தேதிக்குள் கர்நாடகத்தில் தேர்தல்!
சென்னை: கர்நாடக மாநில சட்டசபைக்கு மே 28ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி தெரிவித்துள்ளார்.
நேற்று சென்னை வந்த கோபாலசாமி, மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா உள்ளிட்ட அதிகாரிகளுடன், தொகுதி மறு சீரமைப்பின் அடிப்படையில் அமைந்துள்ள புதிய தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கோபாலசாமி பேசுகையில், புதிய தொகுதிகளின் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. ஜூலை 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதன் பின்னர் திருத்தங்கள், நீக்கங்கள் மேற்கொள்ளப்பட்டு ஆகஸ்ட் 1ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தல் உள்பட இனிமேல் நடைபெறும் அனைத்துத் தேர்தல்களும் புதிய தொகுதிகளின் அடிப்படையில்தான் நடைபெறும்.
இருப்பினும் இடைத் தேர்தல்கள் தற்போதுள்ள தொகுதிகளின் அடிப்படையில் நடத்தப்படும்.
கர்நாடகத்தில் தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. தேர்தல் பாதுகாப்புக்குத் தேவைப்படும் போலீஸாரின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. எத்தனை வாக்குச் சாவடிகள் தேவை என்றும் ஆலோசித்து வருகிறோம்.
இந்தப் பணிகள் முடிந்தவுடன் தேர்தல் தேதியை அறிவிப்போம். அனேகமாக ஓரிரு நாட்களில் தேதி அறிவிக்கப்படலாம். மே 28ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்பட்டு விடும் என்றார் கோபாலசாமி.