ஆங்கிலம் கலந்து பேசும் தமிழர்கள் - ராமதாஸ் வருத்தம்
புதுச்சேரி: தமிழகத்திலும், புதுவையிலும் தமிழர்கள் தமிழை கலப்படமாகத்தான் பேசுகிறார்கள். ஆங்கிலம் கலந்து தமிழைப் பேசுவது வருத்தம் தருகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
புதுவையைச் சேர்ந்த தமிழறிஞர் கவிஞர் புதுவை சிவத்தின் நூற்றாண்டு விழா புதுச்சேரியில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேராசிரியர் ராமதாஸ் பேசுகையில், பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் பெயரை புதுச்சேரி என பெயர் மாற்றம் செய்ய நான் மிகுந்த பாடுபட்டேன். பெயரும் மாறியுள்ளது.
ஆனால் புதுவை ஆளும் கட்சி, புதுச்சேரி நகரின் பெயரை மீண்டும் பாண்டிச்சேரி என மாற்றியுள்ளது. இது தவறான செயலாகும். பாண்டிச்சேரி என்ற பெயரை மீண்டும் புதுச்சேரி என மாற்ற புதுவை மாநில சட்டசபை உறுப்பினர்கள் நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே முயற்சிக்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வியப்புக்குரியதாக உள்ளது என்றார் ராமதாஸ்.
நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், தமிழகத்திலும், புதுவையிலும் உள்ள தமிழர்கள் தமிழை தமிழாக பேசுவதில்லை. ஆங்கிலம் கலந்து, கலப்படமாகத்தான் பேசுகிறார்கள். இது வருத்தம் தருகிறது என்றார்.