ஓகேனக்கல்-பிரச்சனை கிளப்பினால்...ராமதாஸ்
கோவை: ஓகேனக்கல் தமிழ்நாட்டுக்கு சொந்தமானது. இதில் கர்நாடகம் பிரச்சினையை கிளப்பினால் 'பெங்களூர் எங்களூர்' என்று தமிழகம் சொல்ல வேண்டி வரும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
கோவையில் நிருவர்களிடம் பேசிய அவர்,
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து 10 ஆண்டுகளாக போராட்டங்கள் நடத்தி வருகிறது. சட்டமன்றத்தில் இதுபற்றி எங்கள் கட்சியினர் கேள்வி எழுப்பியபோது அதற்கு பதிலளித்த அமைச்சர்கள்,
மத்தியில் அன்புமணி ராமதாசிடம் சொல்லி, பிரதமர், சோனியா காந்தியிடம் சொல்லி நாடு முழுவதும் அமல்படுத்தினால் அதை தமிழகம் பின்பற்றும் என்று கூறி உள்ளனர். இந்த விஷயத்தில் அமைச்சர்கள் சரித்திரம் தெரியாமல் பேசுகிறார்கள். மதுவிலக்கு அமல்படுத்துவது என்பது மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது.
குஜராத்தில் இன்னும் பூரண மது விலக்கு அமலில் உள்ளது. இருந்தாலும் அந்த மாநிலத்தின் வளர்ச்சி முதன்மையாக உள்ளது. கர்நாடகாவில் ஒரே நேரத்தில் 5,000 சாராயக் கடைகள் மூடப்பட்டு மதுவிக்கு அமல் படுத்தப்பட்டது.
மேலும் கள்ளச் சாராயத்தை தடுக்கவும் அந்த மாநில முதல்வர் கடும் நடவடிக்கை எடுத்தார். இதுபோல் ஹரியானா, ஆந்திரா, மிசோரம் போன்ற மாநிலங்களிலும் மதுவிக்கு அமலில் உள்ளது.
திமுக கொள்கை?
தமிழகத்தில் கடந்த 71ம் ஆண்டு வரை மதுவிலக்கு அமலில் இருந்தது. திமுக ஆட்சியில் தான் மதுவிலக்கு அகற்றப்பட்டது. கருணாநிதியை நேரில் சென்று ராஜாஜி வலியுறுத்தியும்கூட திமுக அரசு அதற்கு தயாராக இல்லை. இந்த சரித்திரத்தை அமைச்சர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
மதுவிலக்கை கொண்டு வருவதில் திமுகவின் கொள்கை என்ன, திமுக அரசின் கொள்கை என்ன, முதல்வர் கருணாநிதியின் கொள்கை என்ன என்பதை அறிய விரும்புகிறேன். வருமானம் என்ற மாயையை காட்டி மதுக்கடைகளை மூடமாட்டோம் என்று திமுக அரசு சொல்வது மக்களை விட மக்களின் வருமானம் தான் முக்கியம் என்பதையே காட்டுகிறது.
தமிழகத்தில் 2011ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அது கூட்டணி அரசாகத்தான் அமையும். அப்போது ஆட்சிக்கு வரும் முதல்வர் இடும் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் கையெழுத்தாகத்தான் இருக்கும்.
அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வால் சாதாரண மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பண வீக்கம், உலக சந்தை என்று காரணம் கூறுவதில் அர்த்தம் இல்லை.
இதற்கு ஆன்லைன் டிரேடிங் தான் காரணம். ஆகவே அதற்கு அரசு தடை விதித்தாலே அனைத்து பொருட்களின் விலையும் குறையும்.
ஓகேனக்கல் தமிழ்நாட்டுக்கு சொந்தமானது. இதில் கர்நாடகா உள்ளே நுழைய அனுமதி இல்லை. 40 ஆண்டுகளுக்கு முன்பு முடிந்த எல்லைப் பிரச்சினை இது. இதில் உரிமை கொண்டாட முடியாது. முடிந்து போன பிரச்சினையை கிளப்பினால் பெங்களூர் எங்களூர் என்று சொல்ல வேண்டி வரும் என்றார் ராமதாஸ்.
நிலப்பறிப்பு கொள்ளை:
பின்னர் தமிழ்நாடு உழவர் பேரியக்கம், அனைத்து உழவர் சங்கம் இணைந்து நடத்திய கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய ராமதாஸ்,
சுதந்திரம் பெற்றதில் இருந்து விவசாயம் நாட்டின் முதுகெலும்பு என பேசாத அரசியல் கட்சிகள் ஏதுமில்லை. ஆனால், விவசாயத்துக்கென கட்சிகள் எதுவும் செய்யவில்லை.
இந்தியாவின் வேளாண் வளர்ச்சி 2.3 சதவீதம், இலக்கு 4 சதவீதம். ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 9 சதவீதம் என நிதியமைச்சர் சிதம்பரம் சொல்கிறார். வேளாண் வளர்ச்சி பற்றி யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை.
1.50 லட்சம் விவசாயிகள் தற்கொலைக்கு பின்பே, அரசியல் கட்சி தலைவர்களின் கண்கள் திறந்துள்ளன. ரூ.60,000 கோடி வங்கிக் கடனை தள்ளுபடி செய்துள்ளது மத்திய அரசு. இது மயங்கி விழுந்த விவசாயிக்கு, முகத்தில் தண்ணீர் தெளிக்க மட்டுமே உதவும்.
நிம்மதியாக, மானம், மரியாதையோடு வாழ முப்பாட்டன்களின் சொத்துக்களை சந்ததியினருக்கு வழங்க, விவசாயிகளால் முடியவில்லை. நில ஆர்ஜிதம் என்ற வார்த்தையையே அகராதியில் இருந்து எடுக்க வேண்டும். இந்த வார்த்தையே, விவசாயிகளின் காதில் ஒலிக்கக் கூடாது.
வீட்டு வசதி வாரியம் மற்றும் விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை நிலப்பறிப்பு கொள்ளையாகத்தான் மக்கள் பார்க்கின்றனர். தமிழக வீட்டு வசதி வாரியத்தில் ஊழல், முறைகேடு அதிகமாக உள்ளது. இதை வெளிச்சத்துக்கு கொண்டுவர, ஓய்வு பெற்ற மூன்று நீதிபதிகளைக் கொண்ட விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications