எட்டே மாதங்களில் கட்டப்பட்ட உஸ்மான் சாலை பாலம்
சென்னை: சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையையும், கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் சாலையையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள புதிய பாலம் 8 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சியின்போது, மு.க.ஸ்டாலின் மேயராக இருந்தபோது, சென்னை மாநகரில் பல குட்டிப் பாலங்கள் கட்டப்பட்டு மக்கள் வரவேற்பைப் பெற்றன. இதனால் அந்தப் பாலங்கள் உள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மிகவும் குறைந்தது.
இந்த நிலையில் தற்போதைய ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக உள்ள மு.க.ஸ்டாலின் பாலங்கள் மீதான தனது ஆர்வத்தை சற்றும் தணித்துக் கொள்ளவில்லை. தொடர்ந்து பாலங்கள் கட்டும் பணியை முடுக்கி விட்டு வருகிறார்.
கடந்த சென்னை மாநகராட்சியின்போது, மகாலிங்கபுரம் சாலை - வடக்கு உஸ்மான் சாலை பாலம், உஸ்மான் சாலை - பனகல் பூங்கா சந்திப்பு, ஜி.என்.செட்டி சாலை - திருமலைப்பிள்ளை சாலை சந்திப்பு, செனடாப் ரோடு - டர்ன்புல்ஸ் ரோடு சந்திப்பு ஆகிய இடங்களில் பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டது.
அப்போது சென்னை மாநகராட்சி பணிகள் நிலைக் குழு தலைவராக அ.தி.மு.க., வைச் சேர்ந்த சுகுமார் பாபு இருந்தார். இந்த தீர்மானம் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட போது திட்டம் தள்ளிப் போடப்பட்டது.
பின்னர் சென்னை மாநகராட்சியை தி.மு.க., கைப்பற்றி மா.சுப்ரமணியம் மேயர் ஆனதும் திட்டம் மீண்டும் தூசி தட்டி எடுக்கப்பட்டது. இந்த நான்கு இடங்களிலும் பாலம் கட்ட கேமன் இண்டியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது.
வடக்கு உஸ்மான் சாலை பாலம் ஒன்பது கோடியே 72 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இதன் நீளம் 472 மீட்டர்; அகலம் எட்டு மீட்டர்; 12 தூண்களுடன் இருவழிப்பாதை போக்குவரத்து மேம்பாலமாக கட்டப்பட்டது.
இப்பாலங்களை கட்ட கடந்த ஆண்டு பிப்ரவரியில் மாநகராட்சி ஒப்புதல் அளித்தது. ஜூலை மாதம் பணிகள் துவங்கின. உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் பலமுறை சென்று பாலப் பணிகளை முடுக்கி விட்டார். மேயரும் பலமுறை நேரில் சென்று பார்வையிட்டார். இதனால் மகாலிங்கபுரம் பாலம் கட்டும் பணி வேகமாக நடைபெற்று முடிந்துள்ளது.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில், எட்டு மாதங்களில் பாலம் கட்டும் பணி விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது சாதனையாக கூறப்படுகிறது. இதர பாலங்களின் பணி வேகமாக நடந்து வருகிறது.
இதுதவிர, சென்னையில் ஆறு இடங்களில் மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணிக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஐந்து இடங்களில் பணிகள் நடந்து வருகின்றன.
வடக்கு உஸ்மான் சாலை - மகாலிங்கபுரம் மேம்பாலம் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைக்கும் என்று மக்கள் கூறுகின்றனர். இதேபோல பிற பாலங்களையும் விரைவாக கட்டி முடித்தால் சென்னை நகரின் போக்குவரத்து நெரிசல், குறிப்பாக இப்பகுதிகளில் நிலவும் நெரிசல் வெகுவாக குறையும் என்று மக்கள் கூறுகின்றனர்.