கர்நாடகத்தில் ஏப்ரல் 10ம் தேதி பந்த்!
பெங்களூர்: தமிழகம் மேற்கொள்ளவுள்ள ஓகேனக்கல் கூட்டுக் குடிநீ்ர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 10ம் தேதி (வியாழக்கிழமை) பந்த் நடத்த கன்னட அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
இன்று பெங்களூரில் நடந்த கன்னட ரக்ஷன வேதிகே உள்ளிட்ட கன்னட அமைப்புகளின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஊட்டி, ஈரோட்டையும் கேட்போம்-வாட்டாள்:
ஓகேனக்கல் விவகாரத்தில் தமிழகம் தொடர்ந்து இதே ரீதியாக நடந்து கொண்டால் ஊட்டி, ஈரோடு, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய நகரங்களை கர்நாடகாவுடன் இணைக்க கோரி மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என கன்னட சளுவாலி தலைவர் வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், ஓகேனக்கல் கர்நாடகாவுக்கு சொந்தமானது. ஓகேனக்கல் குடிநீர் திட்டத்தை உடனே நிறுத்த வேண்டும். இதுபற்றி மத்திய அரசு மீண்டும் சர்வே நடத்த வேண்டும்.
கர்நாடகாவின் எதிர்ப்பை கவர்னர் ரமேஷ்வர் தாக்கூர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து தெரிவிக்க வேண்டும்.
தமிழகம் தொடர்ந்து இதே ரீதியாக நடந்து கொண்டால் ஊட்டி, ஈரோடு, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய நகரங்களை கர்நாடகாவுடன் இணைக்க நாங்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்த வேண்டியதிருக்கும் என்றார்.
தமிழ்நாட்டுக்கு பாடம்-குமாரசாமி:
முன்னாள் பிரதமர் தேவெ கெளடாவின் மகனும் முன்னாள் கர்நாடக முதல்வருமான குமாரசாமி கூறுகையில்,
ஓகேனக்கல் பிரச்சினையில் தமிழ்நாட்டுக்கு பாடம் கற்பிக்கும் போராட்டத்தை மதசார்பற்ற ஜனதா தளம் தொடங்கி விட்டது. மத்திய அரசு இந்த பிரச்சினையின் முக்கியத்துவத்தை உணர்ந்து இதில் உடனடியாக தலையிட வேண்டும்.
காவிரி, கிருஷ்ணா, ஓகேனக்கல் பிரச்சினைகளில் இப்போது மாநிலத்தின் நிலைமை நீருபூத்த நெருப்பாக இருக்கிறது. கன்னடர்களின் மனநிலைக்கு பணிவதன் மூலம் பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும்.
ஓகேனக்கல் கர்நாடகத்துக்கு சேர வேண்டுமா, இல்லை தமிழகத்துக்கு சேர வேண்டுமா என்பதை முடிவு செய்ய மீண்டும் சர்வே நடத்த வேண்டும்.
பாஜக மற்றும் காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளால் இது போன்ற உள்ளூர் பிரச்சினைகளுக்கு முடிவு கிடைக்காது என்றார்.
தமிழ்நாட்டுக்கு மட்டும்... பாஜக:
ஓகேனக்கல் குடிநீர் திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர கர்நாடக பாஜக முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுரேஷ் குமார் கூறுகையில்,
ஓகேனக்கலில் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற இருக்கும் இடம், பிரச்சினைக்குரிய இடம். இதுபற்றிய ஒரு வழக்கு கோர்ட்டில் இருக்கிறது. பாஜக பொதுச் செயலாளர் அருண் ஜெட்லி வரும் 5ம் தேதி பெங்களூர் வருகிறார்.
சட்ட நிபுணர்களுடன் அவர் கலந்து பேசுகிறார். அப்போது ஓகேனக்கல் பிரச்சினை குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவது குறித்து முடிவு செய்யப்படும்.
மத்திய அரசு, கர்நாடகத்தை மாற்றான் தாய் பிள்ளையாக நடத்துகிறது. தமிழ்நாட்டுக்கு நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டத்துக்கு ரூ. 10,228 கோடி ஒதுக்கி இருக்கிறது. ஆனால் கர்நாடகத்துக்கு ரூ. 2,081 கோடிதான் ஒதுக்கி உள்ளனர் என்றார்.
ஆளுநரிடம் மனு:
இந் நிலையில் பாஜகவினர் எம்பி அனந்தகுமார் தலைமையில் இன்று ஆளுநர் ராமேஸ்வர் தாக்கூரை சந்தித்து ஒரு மனு அளித்தனர். அதில் ஓகேனக்கல் திட்டத்துக்கு தடை விதிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
காங்கிரசும்...
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில்,
கன்னடர்கள் பொறுமையானவர்கள். தமிழ்நாட்டுக்கு பதில் சொல்வதற்கு சக்தி இல்லாமல் இல்லை. (முதல்வர் கருணாநிதிக்கு) அதே பாணியில் பதில் அளிக்கவும் தயாராக இருக்கிறார்கள். ஒவ்வொரு பிரச்சினைக்கும் மக்களின் உணர்வை தூண்டி விடும் வகையில் அறிக்கை வெளியிடுவது கண்டிக்கத்தக்கது என்றார்.
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறுகையில், ஓகேனக்கல் விவகாரம் இரு மாநில அரசுகளும் பேசி தீர்க்க வேண்டிய பிரச்சினை என்றார்.
தடை கோரும் கர்நாடகம்:
இதற்கிடையே ஓகேனக்கல் குடிநீர் திட்டத்தை தடுத்து நிறுத்துமாறு மத்திய அரசுக்கு கர்நாடக அரசு மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. கர்நாடக அரசின் தலைமை செயலாளர் சுதாகர் ராவ் இதைத் தெரிவித்தார்.