ரணில் ஆட்சியைக் கலைத்தது பெரும் தவறு-சந்திரிகா
கொழும்பு: பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஆட்சியை கலைத்தது நான் செய்த பெரும் தவறு என்று இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா வருத்தம் தெரிவித்துள்ளார். இதுதவிர மேலும் 2 பெரிய தவறுகளையும் தான் செய்துள்ளதாக கூறியுள்ளார்.
சந்திரிகா குமாரதுங்கா 9 ஆண்டுகள் அந்நாட்டின் அதிபராக இருந்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில் அரசியல் வாழ்க்கையில் தான் செய்த 3 குற்றங்கள் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். அவற்றை பட்டியலிட்டும் கூறியுள்ளார்.
புலிகளுடன் அமைதி பேச்சு வார்த்தை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஆட்சியை 2004ம் ஆண்டு கலைத்தது தான் செய்த முதல் பெருங்குற்றம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்து சிங்கள தீவிரவாத கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனாவுடன் தனது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டணி வைத்ததும் தவறு என்று கூறியுள்ளார். 3வதாக தான் செய்த தவறை தற்போது கூற முடியாத சூழ்நிலையில் இருப்பதாகவும், காலம் வரும்போது அதையும் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இனப்பிரச்னையில் இருதரப்பிலும் பலி அதிகமாகி வருகிறது. இதற்கு தீர்வுகாண ஆளும் ஸ்ரீலங்கா தேசிய கட்சியும், எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து பாடுபட வேண்டும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எனது தந்தை உருவாக்கியதால் அதன் மீது எனக்கு பாசம் அதிகம் உண்டு. ஆனால் எதிர்காலத்தில் நானோ, எனது சகோதரி சுமித்ராவோ தீவிர அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை.
தற்போதைய அரசின் சில கொள்கைகள் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்துவிட்டு ராணுவ ஆட்சிக்கு வழி வகுத்துக் கொண்டிருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications