'கோமா'வில் களக்காடு அரசு மருத்துவமனை!
களக்காடு: களக்காடு அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளே இல்லாததால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
களக்காடு-நாங்குநேரி ரோட்டில் பெல்ஜியம் என்ற இடத்தில் உள்ள அரசு மருத்துவமனை கடந்த 1968ல் தொடங்கப்பட்டது. இந்தியாவிற்கு வந்த ஆங்கிலேயர் பிரிடா மோனியர் இந்த மருத்துவமனையை தொடங்கி அரசிடம் ஓப்படைத்தார்.
களக்காடு சுற்று வட்டராத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட கிராம மக்களின் நோய்களை தீர்ப்பதற்காக தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை தற்போது எந்த வசதியுமின்றி கோமா நிலையில் உள்ளது.
நெல்லை மருத்துவ கல்லுரி டீனின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த மருத்துவமனையில் ஒரு முதுநிலை டாக்டர், ஒரு இளநிலை டாக்டர், 6 செவிலியர்கள், 15க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
எனினும் உரிய நேரத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை கிடைப்பதில்லை என புகார் எழுந்துள்ளது.
சிகிச்சை பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதால் நோயாளிகள் அவதிக்கு ஆளாகின்றனர். கடந்த 11ம் தேதி சிகிச்சைக்காக நீண்ட நேரம் காத்திருந்த பிரபல ரவடி தங்கராஜ் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
30 படுக்கை வசதிகள் இருந்தும் உள் நோயாளிகள் அதிக அளவில் அனுமதிக்கப்படுவதில்லை. நாய்க்கடி மற்றும் விஷக்கடி மருந்துகள் இல்லாததால் நெல்லை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது.
விபத்து மற்றும் குற்ற நடவடிக்கைகளினால் ஏற்படும் காயங்களுக்கு முதலுதவி சிகிச்சை கூட அளிக்கப்படுவதில்லை. இதனால் நெல்லைக்கு கொண்டு செல்வதால் சிலர் வழியிலேயே உயிரிழக்கின்றனர்.
எனவே கோமா நிலைக்கு சென்று விட்ட இந்த மருத்துவமனையை உரிய முதலுதவி செய்து காப்பாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.