வயோதிகம்: விலக விரும்பும் சுர்ஜித், ஜோதி பாசு
கோவை: வயோதிகம் மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக தங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் உயர்நிலைக் குழுவிலிருந்து (பொலிட்பீரோ) விலக அனுமதிக்குமாறு மூத்த தலைவர்களான ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தும், ஜோதிபாசுவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் டபிள்யூ. ஆர்.வரதராஜன் கோவையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், இரு மூத்த தலைவர்களும் தங்களது வயது மற்றும் உடல் நலக்குறைவு ஆகியவை காரணமாக பொலிட்பீரோவிலிருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக கட்சி மேலிடத்திலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பான முடிவு கோவையில் நடந்து வரும் 19வது அகில இந்திய மாநாட்டின் கடைசி நாளான ஏப்ரல் 3ம் தேதி எடுக்கப்படும்.
கடந்த 2005ம் ஆண்டு டெல்லியில் நடந்த 18வது அகில இந்திய மாநாட்டின்போது, 17 பொலிட்பீரோ உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் அனில் பிஸ்வாஸும், சித்தபிரதா மஜூம்தார் ஆகியோர் சமீபத்தில் மரணமடைந்தனர்.
கடந்த மாநாட்டின்போதே தாங்கள் விலக விரும்புவதாக ஜோதி பாசுவும், சுர்ஜித்தும் கோரினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து இடம் பெற வேண்டும் என கட்சி வலியுறுத்தியதால் அவர்கள் தொடர்ந்து உறுப்பினர்களாக நீடித்து வருகின்றனர் என்றார் அவர்.
1964ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது மொத்தம் 9 உறுப்பினர்களைக் கொண்ட பொலிட்பீரோ முதல் முறையாக உருவாக்கப்பட்டது. அதில் இடம் பெற்றிருந்தவர்கள் ஜோதிபாசுவும், சுர்ஜித்தும் என்பது குறிப்பிடத்தக்கது. அன்று முதல் இன்று வரை இருவரும் பொலிட்பீரோவில் தொடர்ந்து நீடித்து வருகின்றனர்.
முதல் பொலிட்பீரோவில் இடம் பெற்றிருந்த தலைவர்களில் இன்று உயிருடன் இருப்பவர்களும் இவர்கள் மட்டும்தான்.
கோவையில் நடைபெறும் மாநாட்டில் ஜோதிபாசு கலந்து கொள்ளவில்லை. ஜோதிபாசு இல்லாமல் சிபிஎம் மாநாடு நடைபெறுவதும் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.