கன்னட அமைப்புகளுக்கு எதிராக 4ம் தேதி தமிழ் நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்

ஓகேனக்கல் விவகாரம் தொடர்பாக கர்நாடகத்தில் நேற்று கன்னட அமைப்பினர் தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்களில் புகுந்து தாக்குதல் நடத்தினர்.
இதுதவிர மைசூர் உள்ளிட்ட சில இடங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. பேருந்துகளும் தடுத்து நிறுத்தப்பட்டன.
கன்னட அமைப்பினரின் இந்தச் செயலால் தமிழ்த் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து இன்று அவரசமாக கூடி ஆலோசனை நடத்தப்பட்டது.
அண்ணா சாலையில் உள்ள திரைப்படத் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன் ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இதில் நடிகர்கள் சத்யராஜ், ராதாரவி, தயாரிப்பாளர்கள் கோவை தம்பி, காஜா மைதீன், கே.ஆர்.ஜி, அன்பாலயா பிரபாகரன், சிவசக்தி பாண்டியன், சிவா, அழகன் தமிழ்மணி, கே.சீனிவாசன், சேகர் பெப்சி உமா சங்கர், குணா உள்பட நடிகர் சங்கத்தினர், தயாரிப்பாளர் சங்கத்தினர், பெப்சி சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் கன்னட அமைப்பினரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அவர்களை கண்டித்து பெங்களூர்-ஒசூர் எல்லையில் நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தலாம் என சிலர் யோசனை தெரிவித்தனர்.
ஆனால், இது இரு மாநிலங்களிடையே பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்பதால் எல்லைப் பகுதியை தவி்ர்த்துவிட்டு சென்னையிலேயே உண்ணாவிரதம் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.
சென்னையில் வரும் 4ம் தேதி (வெள்ளிக்கிழமை) சரத்குமார் தலைமையில் இந்த உண்ணாவிரதம் நடக்கவுள்ளது.
இந்த உண்ணாவிரதம் தவிர பல அடுக்கு தொடர் போராட்டங்களை நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திரைப்படங்களும் ரத்து-சரத்குமார்:
இதுகுறித்து நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறுகையில், ஏப்ரல் 4ம் தேதி நடக்கும் இந்தப் போராட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். போராட்டம் நடைபெறும் இடம் காவல்துறையினருடன் விவாதித்து விட்டு அறிவிக்கப்படும்.
போராட்டம் நடைபெறும் நாளின்போது தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் படப்பிடிப்பு நடைபெறாது. டப்பிங் பணிகள் ரத்து செய்யப்படும் தியேட்டர்களில் படங்கள் திரையிடுவதும் நிறுத்தப்படும்.
உண்ணாவிரத்தில் பங்கேற்காவிட்டால்...:
அனைத்து நடிகர், நடிகைகளும் இதில் தவறாமல் பங்கேற்க வேண்டும். இதில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கும் கலைஞர்களுக்கு திரைத் துறையின் எந்த சங்கமும் ஒத்துழைப்பு தராது. இது திரையுலகின் ஒருமித்த முடிவு என்றார்.
இது ரஜினிக்கும் பொருந்தும்.. சத்யராஜ் ஆவேசம்:
அப்போது செய்தியாளர் ஒருவர் ரஜினிகாந்த்துக்கும் இந்த போராட்டம் பொருந்துமா என்று கேட்டபோது குறுக்கிட்ட நடிகர் சத்யராஜ், தமிழ்நாட்ல இருந்துக்கிட்டு, தமிழனோட சோத்தை திங்கிறவன் அத்தனை பேரும் இதில் கலந்து கொள்ள வேண்டும். இல்லைன்னா அவர்கள் இங்கே இருக்கவே முடியாதுங்க என்றார் ஆவேசமாக.
ஏற்கனவே நடிகர் விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது காவிரிப் பிரச்சினையில், பாரதிராஜா தலைமையில் நெய்வேலியில் மாபெரும் போராட்டத்தை நடிகர் சங்கம் நடத்தியது நினைவிருக்கலாம்.
அந்தப் போராட்டத்தில் கமல்ஹாசன் உள்பட அனைவரும் திரண்டு வந்தனர். ஆனால் ரஜினிகாந்த் மட்டும் அதில் பங்கேற்காமல் அடுத்த நாள் சென்னையில் தனியாக உண்ணாவிரதம் இருந்தார் என்பது நினைவுகூறத்தக்கது.
ஆனால், அர்ஜூன் உள்ளிட்ட கர்நாடகத்தைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் தமிழ் திரையுலகினர் நடத்திய போராட்டத்திலோ அல்லது ரஜினியின் உண்ணாவிரதத்திலோ பங்கேற்காமல் ஒதுங்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications