கர்நாடக தாக்குதல்-மத்திய அரசு தலையிட தமிழக சட்டசபை கோரிக்கை

தமிழக மக்களின் உரிமைகளைக் காக்க மத்திய அரசு தலையிட வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டவிருப்பதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று பெங்களூர் வன்முறை குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீது அனைத்துக் கட்சித் தலைவர்களும் பேசினர்.
பாஜகவே காரணம்:
தங்களது பேச்சின்போது, கர்நாடக அரசு ஏற்கனவே ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்டத்திற்கு ஒப்புதல் தெரிவித்துள்ள நிலையில் இப்போது எதிர்ப்பது நியாயமற்றது. இதுவரை மதவாத அரசியல் நடத்தி வரும் பாஜக, இப்போது இனவாத அரசியலுக்கும் வழி வகுத்துள்ளது என்று பல்வேறு கட்சியினரும் குற்றம் சாட்டினர். (ஓகேனக்கல் விவகாரத்தை தூண்டிவிட்டதே கர்நாடக பாஜக தலைவர் எதியூரப்பா தான் என்பது குறிப்பிடத்தக்கது. அம் மாநிலத்தி்ல் சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில் ஓட்டுக்காக அவர் ஆரம்பித்த சர்ச்சை இது)
தமிழர்களை கண்டால் வெறுப்பா?-கருணாநிதி:
இதையடுத்து பேசிய முதல்வர் கருணாநிதி, கர்நாடகாவில் தமிழர்கள் என்றாலே சில மொழி வெறியர்களுக்கு அறவே பிடிப்பது இல்லை. நம்மை வெறுப்பதையே வாடிக்கை தொழிலாக கொண்டுள்ளனர்.
இது தீர்க்கப்படாத வரை இந்தியாவின் ஒருமைப்பாடு என்பது வாய்மொழியாகத்தான் இருக்கும். எடுத்துக் காட்டாக உலகம் போற்றும் உத்தமஞானி அய்யன் திருவள்ளுவருக்கு கர்நாடகாவில் மதிப்பு உண்டா என்றால் இல்லை.
பல ஆண்டுகளுக்கு முன்பே பெங்களூர் தமிழ்ச்சங்க வாசலில் அய்யன் திருவள்ளுவர் சிலை திறக்கப்படாமல் துணி கொண்டு மூடப்பட்டுள்ளது. அதை திறக்கக் கூடாது என்று மொழி வெறியர்கள் தடுக்கிறார்கள். இதனால் 10 ஆண்டுகளாக திருவள்ளுவர் சிலை திறக்கப்படாமல் உள்ளது.
என்னை பெங்களூரில் சில நிகழ்ச்சிகளுக்கு வருமாறு அழைத்து போது கூட திருவள்ளூர் சிலை எப்போது திறக்கப்படுகிறதோ, அதற்கு பிறகுதான் நான் பெங்களூர் நிகழ்ச்சிகளுக்கு வருவேன் என்று கூறி பெங்களூர் நிகழ்ச்சிகளுக்கு செல்வதை நிறுத்தி விட்டேன்.
எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வள்ளுவருக்கே அங்கு இந்த நிலை.
காவிரியில் பயிருக்கு நீர் தர மறுக்கும் கர்நாடகம் இப்போது உயிருக்கும் குடிநீர் தர மறுக்கிறது. இதற்கு ஒகேனக்கல் பிரச்சினையை கையில் எடுத்துள்ளனர்.
மொழி வெறியர்கள் சிலர் தமிழர்களுக்கும், தமிழ் உணர்வுக்கும், தமிழக மக்களுடைய நலன்களுக்கும் விரோதமாகவும் நடந்து கொள்ளும் போக்கையும், நடக்கும் கலவரங்களையும் இந்த சட்டமன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு இவற்றைக் காக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. அந்தப் பொறுப்பை உணர்ந்து உடனடியாக அதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், தமிழக மக்களின் உரிமைகளைக் காக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று மத்திய அரசை இந்த மாமன்றம், இந்தத் தீர்மானத்தின் மூலம் வலியுறுத்துகிறது என்றார்.
பின்னர் தீர்மானம் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications