சோனியா காரைக்குடி வருகை-தீவிர பாதுகாப்பு
மதுரை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வருகிற 5ம் தேதி சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு வருகிறார். அவருக்கு பிரமாண்ட வரவேற்பு தர காங்கிரஸ் கட்சியினர் தயாராகி வருகின்றனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வருகிற 5ம் தேதி பிற்பகல் 12 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் டெல்லியிலிருந்து கிளம்பி 2.30 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்து சேருகிறார்.
விமான நிலையத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அவரை வரவேற்கின்றனர். அங்கு சிறிது நேரம் காங்கிரஸ் தலைவருடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்துகிறார். அதன் பின்னர் காரைக்குடிக்கு அவர் மாலை 3.30 மணிக்கு வருகிறார்.
காரைக்குடி வரும் அவர் அங்குள்ள அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில், தனது தந்தையின் நினைவாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ரூ. 3 கோடி செலவில் கட்டியுள்ள புதிய ஆடிட்டோரியத்தை திறந்து வைக்கிறார்.
பின்னர் ரூ. 60,000 கோடி விவசாயக் கடன்களை ரத்து செய்த மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்து விவசாயிகள் மற்றும் பெண்கள் நடத்தும் பாராட்டுக் கூட்டத்தில் சோனியா காந்தி கலந்து கொண்டு பேசுகிறார்.
இதையடுத்து தனது தமிழக பயணத்தை முடித்துக் கொண்டு மீண்டும் திருச்சி திரும்பும் சோனியா காந்தி அங்கிருந்து டெல்லி செல்கிறார்.
சோனியா காந்திக்கு பிரமாண்ட முறையில் வரவேற்பு அளிக்க காங்கிரஸ் கட்சியினர் தயாராகி வருகின்றனர்.
சோனியா காந்திக்கு அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்து தென் மண்டல ஐஜி சஞ்சீவ் குமார் தலைமையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications