ஹிண்ட்ராப் தலைவர்களை விடுவிக்க மலேசிய அரசு மீண்டும் மறுப்பு
கோலாலம்பூர்: உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ஹிண்ட்ராப் தலைவர்களை விடுதலை செய்ய முடியாது என்று மீண்டும் மலேசிய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவர் டத்தோ சாமிவேலு விடுத்த கோரிக்கையை அந்நாட்டு உள்துறை அமைச்சர் அல்பார் நிராகரித்து விட்டார்.
ஹிண்ட்ராப் நிர்வாகிகள் மனோகரன், உதயகுமார் உள்ளிட்ட ஐந்து பேர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் மனோகரன் சட்டசபைத் ேதர்தலில் வெற்றி பெற்றுள்ளார். எனவே மக்களின் தீர்ப்பை மதித்து ஐந்து பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. அதேபோல இதுவரை ஐந்து பேரின் கைதையும் ஆதரித்துப் பேசி வந்த மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் டத்தோ சாமிவேலுவும் ஐந்து பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.
ஆனால் ஏற்கனவே ஐந்து பேரின் விடுதலையும் சாத்தியமில்லை என்று கூறி விட்ட மலேசிய அரசு மீண்டும் இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளது.
இதுகுறித்து உள்துறை அமைச்சர் சையத் ஹமீத் அல்பார் கூறுகையில், ஐந்து பேரும் தொடர்ந்து சிறையில்தான் இருப்பார்கள். மலேசிய இந்திய காங்கிரஸ் விடுதலை செய்யுமாறு கோருவது அதன் உரிமை. அதை நாங்கள் தடுக்க முடியாது.
ஆனால் ஐந்து பேரையும் விடுதலை செய்வது என்பது அரசின் உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது. இதுதொடர்பாக எடுக்கப்படும் எந்த முடிவும் எனது தனிப்பட்ட முடிவு அல்ல. இது சட்டரீதியாக, சட்டப்படி எடுக்கப்பட்ட முடிவு. நான் நாட்டின் பாதுகாப்பையும், பொது ஒழுங்கையும் பாதுகாக்கத்தான் அமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ளேன்.
சாமிவேலு மூத்த அரசியல்வாதி, ஒரு தேசிய கட்சியின் தலைவர். எனவே அவரது கருத்தைச் சொல்ல அவருக்கு உரிமை உள்ளது. இருப்பினும் எங்களது பொறுப்பிலிருந்து நாங்கள் விலக முடியாது என்றார் அல்பார்.












Click it and Unblock the Notifications