எஸ்.வி.சேகர் தொடங்கும் 2 டிவி சேனல்கள்
சென்னை: 2 புதிய சாட்டிலைட் டிவி சானல்களை விரைவில் தொடங்கப்போவதாக காமெடி நடிகரும், அதிமுக எம்எல்ஏவுமான எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் எல்லாம் தங்கெளுக்கென ஒரு டிவி சானலை வைத்துள்ளன. அதிமுகவுக்கு 'ஜெயா', திமுகவுக்கு முன்பு 'சன்', இப்போது 'கலைஞர்', பாமகவுக்கு 'மக்கள்', காங்கிரசுக்கு முன்னாள் அமைச்சர் தங்கபாலுவின் 'மெகா' மற்றும் எம்எல்ஏ வசந்தகுமாரின் 'வசந்த்' ஆகிய டிவிகள் உள்ளன. இதுதவிர ராஜ் டிவி, தமிழன் டிவி, விண் டிவி போன்ற தமிழ் சானல்களும் உள்ளன.
போதாக்குறைக்கு தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் தங்களுக்கென பத்திரிகையும், சாட்டிலைட் சானல் டிவியையும் புதிதாகத் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார்.
இந் நிலையில் நடிகர் எஸ்.வி.சேகரும் இந்த களத்தில் குதித்துள்ளார். அதிமுக சார்பில் மைலாப்பூர் தொகுதியி்ல் போட்டியிட்டு எம்எல்ஏவாக உள்ள சேகர் 2 புதிய டிவி சானல்களைத் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
ரூ. 10 கோடி முதலீட்டில் 'எஸ்வி டிவி', 'இந்தியா டிவி' ஆகிய 2 சானல்களை வரும் 9 மாதங்களுக்குள் தொடங்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் தலைமை அலுவலகம் சென்னையில் அமைக்கப்படுகிறது.
முழுக்க காமெடி நிகழ்ச்சிகளை மட்டுமே எஸ்வி டிவியில் ஒளிபரப்பப்போவதாக சேகர் கூறினார். இந்திய டிவியில் பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமே அல்லாமல் நாடகங்கள், விவாத மேடைகள் போன்ற பிற நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்போவதாக தெரிவித்தார்.