ரஜினி வீட்டுக்கு 24 மணி நேர பாதுகாப்பு
சென்னை: தமிழத்தில் கன்னடர்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து சென்னையில் வசிக்கும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் வீட்டிற்கு 24 மணி நேர பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக கன்னட அமைப்பினர் நடத்தி வரும் வன்முறைப் போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதற்குப் பதிலடியாக தமிழகத்திலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இதையடுத்து சென்னையில் வசித்து வரும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நடிகர், நடிகைகளின் வீடுகளுக்குப் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
போயஸ் கார்டன் பகுதியில் உள்ள ரஜினிகாந்த் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இங்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அவரது வீடு உள்ள ராகவேந்திரா அவென்யூ பகுதி வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனையிடப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
ரஜினிகாந்த் வீட்டின் முன்பு செக் போஸ்ட்டும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல பிற கன்னட நடிகர், நடிகைகளின் வீடுகளுக்கும் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.