ஜெ. வீடு முன்பு உண்ணாவிரதம்-முதியவர் முயற்சி
சென்னை: அதிமுக பிரமுகர் அபகரித்த நிலத்தை மீட்டுத் தரக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முன்பு உண்ணாவிரதம் இருக்க முயன்ற முதியவரை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தி எச்சரித்து அனுப்பினர்.
ஜெயலலிதாவின் வீடு உள்ள சென்னை போயஸ் தோட்டம் பகுதியில் நேற்று ஒரு முதியவர் பெண்மணி ஒருவருடன் ஆட்டோவில் வந்தார். ஆட்டோவை போலீஸார் தடுத்து நிறுத்தி உள்ளே இருந்த முதியவரிடம் விசாரணை நடத்தினர்.
அவரது பெயர் தாஸ், அவருடன் வந்தவர் முதியவரின் தம்பி மனைவி கிரேசி. தாஸ் திருநின்றவூரைச் சேர்ந்தவர். கடந்த 1995ம் ஆண்டு கோடம்பாக்கத்தில் தாஸ் வசித்து வந்தார். அப்போது தனக்குச் சொந்தமான ரூ. 5 லட்சம் மதிப்புடைய நிலத்தை அதிமுக பிரமுகர் ஒருவர் அபகரித்துக் கொண்டதாக தாஸ் கூறியுள்ளார்.
அந்த நிலத்தை மீட்டுத் தரக் கோரி ஜெயலலிதா வீட்டு முன்பு உண்ணாவிரதம் இருக்க வந்ததாக அந்தப் பெரியவர் தெரிவித்தார்.
இதையடுத்து தேனாம்பேட்டை போலீஸாரிடம் இருவரும் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை அழைத்துச் சென்ற போலீஸார், இப்படியெல்லாம் உண்ணாவிரதம் இருக்க முடியாது. போலீஸில் புகார் கொடுத்தால் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறி இருவரையும் அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications