கர்நாடகத்தை கண்டித்து ஓசூரில் 5ம் தேதி பந்த்
ஓசூர்: தமிழகத்திற்கு எதிராக கன்னட அமைப்பினர் பெங்களூர் உள்ளிட்ட கர்நாடக நகரங்களில் நடத்தி வரும் வன்முறை போராட்டங்களைக் கண்டித்து ஓசூரில் 5ம் தேதி முழு அடைப்பு நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கன்னட அமைப்பினர் கர்நாடகத்தில் நடத்தி வரும் முன்முறைப் போராட்டங்களுக்கு தமிழகத்தில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. குறிப்பாக தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் கன்னட இனத்தவர்களும் இதைக் கடுமையாக கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று ஓசூரில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட அனைவரும் கன்னட அமைப்பினரின் போராட்டத்தை கடுமையாக கண்டித்துப் பேசினர். பின்னர் ஓசூர் நகரில் 5ம் தேதி பந்த் நடத்த அவர்கள் தீர்மானித்தனர்.
இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ மனோகரன், பெங்களூர் உள்பட கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக நடந்து வரும் கலவரம் கடும் கண்டனத்துக்குரியது.
அங்குள்ள தமிழர்களை கன்னடக்காரர்கள் தாக்குகிறார்கள். அதேபோல, இங்குள்ள கன்னடக்காரர்களை தமிழர்கள் தாக்கினால் என்ன ஆகும் என்பதை தயவு செய்து கன்னடக்காரர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.
நானும் கன்னடக்காரன்தான். என்னை தமிழர்கள் அடித்தால் அங்குள்ள கன்னடக்காரர்கள் வந்து காப்பாற்றுவார்களா?. தமிழர்கள் திருப்பி அடிக்க மாட்டார்கள் என்பதால்தானே நீங்கள் தாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்?
யாராவது நமது வீட்டுக்கு வந்தால் வரவேற்று உபசரித்து முதலில் கொடுப்பது தண்ணீர்தான். தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்காதவன் மனிதனா? என்று கோபமாக கூறினார்.












Click it and Unblock the Notifications