சிபிஎம் பொதுச் செயலாளராக காரத் மீண்டும் தேர்வு
கோவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக பிரகாஷ் காரத் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அச்சுதானந்தன், சீதாராம் எச்சூரி உள்ளிட்டோர் அடங்கிய புதிய 15 பேர் கொண்ட பொலிட்பீரோ குழுவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கோவையில் கடந்த 6 நாட்களாக நடந்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது தேசிய காங்கிரஸ் இன்றுடன் முடிவடைகிறது. இன்று மாலை பிரமாண்டப் பேரணியும், பொதுக் கூட்டமும் நடைபெறவுள்ளது.
முன்னதாக இன்று காலை பிரகாஷ் காரத் மீண்டும் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அவரை 87 பேர் கொண்ட கட்சியின் மத்திய குழு தேர்வு செய்தது.
இதையடுத்து கட்சியின் அரசியல் தலைமை குழுவான பொலிட்பீரோ மாற்றி அமைக்கப்பட்டது. 15 பேர் கொண்ட புதிய குழு அறிவிக்கப்பட்டது.
இக்குழுவில், கேரள முதல்வர் அச்சுதானந்தன், மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டசார்யா, திரிபுரா முதல்வர் மானிக் சர்க்கார், சீதாராம் எச்சூரி, தமிழகத்தின் வரதராஜன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவராக சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டார்.
பிரகாஷ் காரத் 2வது முறையாக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 3 ஆண்டுகாலம் இப்பொறுப்பை அவர் வகிப்பார்.












Click it and Unblock the Notifications