கணவன் அடித்தால் திருப்பி அடியுங்கள்- மகளிர் ஆணைய தலைவர் அட்வைஸ்
நெல்லை: கணவன் அடித்தால திருப்பி அடியுங்கள், உடல் ரீதியான வன்முறைக்கு இடம் கொடுக்காதீர்கள் என்று குடும்பத் தலைவிகளுக்கு மாநில மகளிர் ஆணைய தலைவர் ராமாத்தாள் கூறினார்.
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் மற்றும் நெல்லை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி இணைந்து குடும்ப வன்முறைகளிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் குறித்த கருத்தரங்கை நடத்தியது.
கல்லூரி வாளகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரகாஷ் தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் ராமாத்தாள் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், பொருளாதார வன்முறை, பாலியல் வன்முறை, குடும்ப வன்முறை உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். கணவன் மனைவியை அடிப்பது இயல்பானது என்றும் அன்பின் வெளிப்பாடு என்றும் கூறப்படுகிறது.
ஜாதி, சமயம், கடவுளின் பெயரால் பெண்களுக்கு சம உரிமை மறுக்கப்படுகிறது. ஆண்களுக்கு உரிய அத்தனை உரிமைகளையும் பெண்களுக்கும் வழங்க வேண்டும்.
அல்வாவும், பூவும் கொடுத்து பெண்களை சமாதானம் செய்து விடலாம் என்பது போன்ற காட்சிகள் திரைப்படங்களில் சித்தரிக்கப்படுகிறது.
போலி சாமியார்களை நம்பி பெண்கள் ஏமாந்து விடுகின்றனர். பெண் பிள்ளைகளுக்கு தைரியம் மற்றும் தன்னம்பிக்கையை ஊட்ட வேண்டும்.
குட்ட குட்ட குனிவதை தவிர்த்து எதிர்த்து நில்லுங்கள். கணவன் அடித்தால் திருப்பி அடியுங்கள். உடல் ரீதியான வன்முறைக்கு இடம் கொடுக்காதீர்கள். குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications