தமிழகம் முழுவதும் இன்று பகல் சினிமா காட்சிகள் ரத்து
சென்னை: கர்நாடகத்தில் தமிழ்ப் படங்களை திரையிடும் தியேட்டர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடக்குமானால் கன்னட நடிகர்-நடிகைகள் நடிக்கும் தமிழ் படங்களை திரையிட மாட்டோம் என்று தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. சங்க தலைவர் அண்ணாமலை, செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
கர்நாடக மாநிலத்தில் தமிழ் திரைப்படங்கள் ஓடிக்கொண்டிருக்கும் திரையரங்குகளை, அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கி வருவதை, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
இனிவரும் காலங்களிலும் இந்த நிலை தொடருமானால், கர்நாடக திரைப்படம் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பந்தப்பட்ட திரைப்படங்களை திரையிடுவதற்கு தொழில் ரீதியாக எந்தவித ஒத்துழைப்பும் தரமாட்டோம்.
கர்நாடகாவில் நடைபெறும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை தமிழ்த் திரையுலகம் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் காலை மற்றும் பகல் காட்சிகளை ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல சென்னை மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாவட்ட திரையரங்குகளில் இன்று காலை மற்றும் பகல் காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன
கன்னட அமைப்பினர் பெங்களூரில் தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்களில் தாக்குதல் நடத்தியதை கடுமையாக கண்டிக்கிறோம்.இந்த விவகாரம் தொடர்பாக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் சென்னை மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஒத்துழைக்கும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications