பெங்களூர் ரயில்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ்
சென்னை: தமிழகத்தில் இருந்து பெங்களூர் செல்லும் ரயில்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு எதிராக கர்நாடகத்தில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இதையடுத்து தமிழகத்திலிருந்து மைசூர் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ், பெங்களூர் செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், பெங்களூர் எக்ஸ்பிரஸ், லால்பாக் எக்ஸ்பிரஸ், சதாப்தி, பெங்களூர் மெயில் ஆகிய 7 ரயில்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் இருந்து பெங்களூருக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரயில்வே போலீஸ் டி.ஐ.ஜி. சிவனாண்டி கூறுகையில்,
கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் இருந்து பெங்களூர் செல்லும் அனைத்து ரயில்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சாதாரண நாட்களில் ரயில்களில் 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஒவ்வொரு ரயிலிலும் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 4 போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ரயில்வே போலீசார் தமிழக எல்லையான ஓசூர் வரை பாதுகாப்புக்கு செல்வர் என்றார்.
ஆனால், ஒசூருக்கு அந்தப் பக்கம் தான் பிரச்சனையே எழுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.