வேப்ப மரத்துக்கு வளைகாப்பு- காஞ்சியில் சுவாரஸ்யம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேப்ப மரத்துக்கு பெண்கள் வளைகாப்பு வைபவம் நடத்தி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது ரெட்டிபேட்டை என்ற கிராமம். இங்குள்ள ஒரு வேப்ப மரத்தின் அடிப்பாகம் கடந்த சில தினத்துக்கு முன்பு வீங்கி பெருத்தது.
இதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த சில பெண்கள் வேப்பமரம் கருவுற்றதாக கூறினர். இந்த தகவல் சுற்று வட்டார பகுதிகளுக்கும் பரவியது.
தகவலறிந்த மற்ற கிராம மக்கள் பூஜை பொருட்களுடன் வேப்ப மரத்தை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். மஞ்சள் குங்கும அலங்காரத்துடன் வழிபாட்டுக்கு வேப்ப மரம் தயாரானது.
இந்தநிலையில் மரத்தின் அடிபாகம் மேலும் பருமனானதால், பெண்கள் ஒன்று கூடி, வேப்ப மரத்துக்கு விமரிசையாக வளைகாப்பு சடங்கு நடத்துவது என்று முடிவெடுத்தனர். இதையடுத்து அக்கம்பக்கத்து கிராமங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வேப்ப மரத்தை குளிப்பாட்டி, மஞ்சள்- குங்குமம் பூசி பூ மாலையிட்டனர். பிறகு அதற்கு ஜரிகைப் பட்டுப் பாவாடை கட்டிவிட்டு ஜோடித்தனர். பெண்கள் வரிசையாக வந்து வேப்ப மரத்தின் கிளைகளில் கண்ணாடி வளையல்களை கட்டித் தொங்கவிட்டனர்.
வளைகாப்பு ஐதீகமாக, ஐந்து வகை உணவு படைக்கப்பட்டு வந்தவர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது.
கர்ப்பிணி பெண்களுக்கு செய்வதை போல வேப்ப மரத்துக்கு சிறப்பாக வளைகாப்பு நடத்தி முடித்துள்ளனர் அந்த ஊர் பெண்கள்.












Click it and Unblock the Notifications