திமுகவுக்கு அதிமுக எம்எல்ஏ பாராட்டு!-'ஆப்பு' எப்போது?
மானாமதுரை: திமுக அரசை அதிமுக எம்எல்ஏ புகழ்ந்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை (தனி) அதிமுக எம்எல்ஏவாக இருப்பவர் குணசேகரன். இவர் ஒன்றிய செயலாளராகவும் உள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு ஒரு பள்ளி விழாவில் கலந்து கொண்டார். அப்போது திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் சிலரும் அந்த விழாவிற்கு வந்திருந்தனர்.
விழாவில் குணசேகரன் பேசுகையில் இன்றைய அரசு மாணவர்களின் நலனில் மிகுந்த அக்கறையோடு செயல்படுகிறது. மாணவர்களை உயர் கல்விக்கு அனுப்பும் செயலில் வேகமாக உள்ளது.
மாணவர்கள் பள்ளிக்கு குறித்த நேரத்தில் வர வேண்டும் என்பதற்காக சைக்கிள் வழங்கியுள்ளது. அதே போன்று இன்றைய முதல்வர் மாணவ மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.
காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் கல்விக்கு ஒரு அமைச்சரை தான் நியமித்தனர். ஆனால் இன்றைய தமிழக முதலவர் கல்வி துறையை இரண்டாக பிரித்து இரு அமைச்சரை நியமித்துள்ளார்.
இதன் மூலம் நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கனவை நினைவாக்கியுள்ளார் தமிழக முதல்வர் என்று பேசினார்.
இந்த பேச்சை கேட்ட அதிமுக வினர் அதிர்ச்சி அடைந்து எம்எல்ஏவின் இந்த பேச்சு குறித்து தங்களது தமைக்கு புகார் அனுப்பியுள்ளனர். விரைவில் அவர் அதிமுகவில் கட்டம் கட்டப்படுவார் என்று தெரிகிறது.
இப்படித்தான் மறைந்த மதுரை மேற்குத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ எஸ்.வி.சண்முகம் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினைப் புகழ்ந்து பேசினார். பின்னர் கட்சியை விட்டு அவர் ஓரம் கட்டப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications