ஓகனேக்கல் திட்டம் அறவே கைவிடப்படவில்லை: கருணாநிதி
சென்னை: ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் அறவே கைவிடப்படுவதாக நான் சொல்லவில்லை என்று முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலில், ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் அறவே கைவிடப்படுகிறது என்று எனது அறிக்கையில் சொல்லப்படவில்லை.
கர்நாடகத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு இப்போது முடிவெடுக்கக் கூடிய அளவுக்கு அரசு இல்லை என்பதாலும் ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்கலாம் என்றுதான் சொல்லியுள்ளேன்.
சட்டமன்றத்திற்கு தொடர்ந்து 3 நாட்களுக்கு விமுறை என்பதால் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கலந்து பேசாமல் அவசரமாக அறிக்கை வெளியிடப்பட்டது.
அப்படி அறிக்கை விடுத்த போதிலும் கூட இந்த விவகாரத்தில் அக்கறை காட்டிய அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், உண்ணாவிரதம் இருந்த திரையுலகினருக்கும் நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொண்டதன் மூலம் அனைத்துத் தரப்பினரையும் கலந்து கொள்ளாத எண்ணம் அரசுக்கோ, எனக்கோ இல்லை என்பதையும் காட்டியுள்ளேன்.
பொக்ரானில் இந்தியா அணுகுண்டு வெடித்த காரணத்தால் அப்போது ஓகனேக்கல் திட்டத்திற்கு ஜப்பானின் நிதியுதவி நிறுத்தப்பட்டது. எனவேதான் அப்போது இந்தத் திட்டத்தை நிறைவேற்ற தாமதமானது.
சமீபத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஜப்பான் சென்று நிதியுதவி குறித்து பேசி முடிவு செய்து விட்டு வந்த பின்னர்தான் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டேன் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.