ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும்-ஜெயமாலா
ஓகேனக்கல் விவகாரத்தில் சென்னையில் திரைப்படத் துறையினர் நடத்திய உண்ணாவிரதத்தில் தான் பேசியது குறித்து கன்னட டிவி சேனல்களுக்கு கன்னடத்திலேயே விளக்கம் தந்தார் ரஜினி.
கன்னடர்கள் புண்படும்படி பேசவில்லை என்று விளக்கிய அவர் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியிருந்தார்.
ஆனால், ரஜினியின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கன்னட நடிகை ஜெயமாலா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ரஜினி பேசிய பேச்சினால் கன்னடர்கள் மனம் புண்பட்டுள்ளது. கன்னடர்களை தாக்கி பேசவில்லை என்று கூறி மறுபடியும் அவர் தவறு செய்ய வேண்டாம்.
உண்ணாவிரதத்தில் ரஜினி பேசிய பேச்சின் வீடியோவை அவர் மீண்டும் பார்க்க வேண்டும். கன்னடர்களை ரஜினி இழிவாக பேசியது உண்மை.
எனவே அவர் கன்னட மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவே இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றார்.
ஐயப்பன் கோவிலில் சுவாமியை தான் தொட்டதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் தான் இந்த ஜெயமாலா என்பது குறிப்பிடத்தக்கது.