டயானா கார் விபத்துக்கு டிரைவர், மீடியா காரணம்: நீதிபதிகள்

டயானா மரணமடைந்து 11 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் அவர் மரணம் எப்படி சம்பவித்தது என்பது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. 1997ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாரீஸில் நடந்த கார் விபத்தில் டயானா பலியானார். அவருடன் பயணித்த காதலர் டோடி அல் பயாத்தும் விபத்தில் உயிரிழந்தார்.
டயானா மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவின. இதையடுத்து நீதிபதி ஸ்காட் பேக்கர் தலைமையில் 11 நீதிபதிகளைக் கொண்ட ஒரு விசாரணை கமிஷனை இங்கிலாந்து அரசு நியமித்தது. கடந்த 6 மாதங்களாக இந்த நீதிபதிகள் குழு விசாரணை நடத்தி வந்தது.
சமீபத்தில், டயானா மரணத்தில், அரச குடும்பத்தினர் எவருக்கும் தொடர்பு இல்லை என்று நீதிமன்றம் அறிவித்தது. இந்த நிலையில் நேற்று இறுதித் தீர்ப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி டயானாவின் காரை துரத்தி வந்த மீடியா புகைப்படக்காரர்கள், அவர் பயணம் செய்த மெர்சிடிஸ் காரை ஓட்டிய டிரைவர் ஹென்றி பால் ஆகியோர்தான், டயானா உயிரிழக்கக் காரணம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மொத்தம் உள்ள 11 பேரில் 9 பேர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளனர். 2 பேர் வேறு விதமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
நீதிபதி பேக்கர் தீர்ப்பு குறித்துக் கூறுகையில், மீடியா புகைப்படக்காரர்கள் டயானாவின் காரை துரத்தியது விபத்துக்கு முக்கிய காரணம். இன்னொரு முக்கிய காரணம், டிரைவர் ஹென்றி பால், காரை படு வேகமாக ஓட்டிச் சென்றது.
ஒருவர் குடித்து விட்டு வேகமாக ஓட்டினால் எந்த வேகத்தில் செல்வாரோ அதை விட மூன்று மடங்கு வேகத்தில் பால் காரை ஓட்டியுள்ளார். அந்தசாலையில் போகக் கூடிய வேகத்தை விட கூடுதலாக அதாவது 65 எம்பிஎச் (மைல்ஸ் பெர் ஹவர்) வேகத்தில் அவர் சென்றுள்ளார்.
இதுதான் விபத்து ஏற்பட முக்கிய காரணமாக அமைந்துள்ளது. மேலும் காரை செலுத்துவதற்கு முன்பு டிரைவர் பால் குடித்துள்ளதும் நிரூபணமாகியுள்ளது.
காரில் பயணித்த யாருமே பாதுகாப்புக்கான சீட் பெல்ட்டுகளை அணிந்திருக்கவில்லை என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், கார் சென்ற சுரங்கப் பாதையின் தூண் மீது கார் பலமாக மோதியதால் கார் மிகவும் மோசமாக சேதமடைந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
இந்தத் தீர்ப்பு குறித்து டோடி அல் பயாத்தின் தந்தையான முகம்மது அல் பயாத் கருத்து ெதரிவிக்கையில், கடந்த 10 ஆண்டுகளில் நான் இரு போலீஸ் விசாரணைகளை சந்தித்துள்ளேன். முதலில் பிரான்ஸ் போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் ஸ்காட்லாந்து யார்ட் போலீஸார் விசாரணை நடத்தினர். இரண்டுமே தவறான விசாரணை என்று நான் கூறி வந்தேன்.
நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், இது ஒரு கொலை. கோர்ட் தீர்ப்பை நான் ஏற்கிறேன். தீர்ப்பு தெளிவாக உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications