என்ன செய்தாலும் மும்பையில்தான் இருப்பேன்-அமிதாப்
மும்பை: என்னை அடித்தாலும், என் வீட்டைத் தாக்கினாலும், எனது பேனர்களை கிழித்தாலும், நான் மும்பையை விட்டு போக மாட்டேன். இது உறுதி என்று சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.
முதலில் ராஜ் தாக்கரே, பிறகு பால் தாக்கரேவின் சாம்னா இதழ் என அடுத்தடுத்து அமிதாப் பச்சனுக்கு சாடல்களும், எதிர்ப்புகளும் வலுத்து வருகின்றன. இதுகுறித்து அமிதாப் பச்சன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு மராத்தியில் அளித்த பேட்டியில், நான் மகாராஷ்டிராவுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று யாரும் கூற முடியாது. மராத்தியர்களையும், மகாராஷ்டிரர்களையும், மும்பை மக்களையும் நான் நேசிக்கிறேன் என்று கூறியிருந்தார.
இந்த நிைலயில் நாளிதழ் ஒன்றுக்கு அமிதாப் அளித்துள்ள பேட்டியில், எந்தக் காரணத்தைக் கொண்டும் நான் மும்பையை விட்டு வெளியேற மாட்டேன் என்று காட்டமாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் மும்பைக்கு அந்நியன் என்று யாராவது சொன்னால் அதை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. நான் மும்பையை விட்டு ஒருபோதும் வெளியேற மாட்டேன்.
மும்பைதான் எனது வீடு. இங்கிருந்து நான் ஒருபோதும் வெளியேற மாட்டேன். என் வீட்டின் மீது அவர்கள் (ராஜ் தாக்கரே கட்சியினர்) ஆயிரம் பாட்டில்களை எறியட்டும். எனது கொடும்பாவிகளை கொளுத்தட்டும். எனது வீட்டு முன்பு போராட்டங்களை நடத்தட்டும். நான் பயப்பட மாட்டேன். எந்தக் காரணத்தைக் கொண்டும் எனக்கு வாழ்வு கொடுத்த மும்பையை விட்டு நான் போக மாட்டேன்.
எனது திரைப்படங்களை திரையிட விடாமல் தடுத்தாலும் சரி, எனது போஸ்டர்களில் தார் பூசி அழித்தாலும் சரி, என் மீது கற்களை வீசியும், கம்புகளால் தாக்கினாலும் சரி, அல்லது இன்னும் என்னவெல்லாம் ஆயுதங்கள் இருக்கிறதோ, அத்தனையைக் கொண்டு என்னைத் தாக்கினாலும் சரி நான் மும்பையை விட்டுப் போக மாட்டேன்.
என் மீது பொய் வழக்குகள் போடட்டும். என்னை எப்படி வேண்டுமானாலும் அசிங்கப்படுத்தட்டும். நான் அவர்களுக்குப் பணிய மாட்டேன்.
என்னை யாரும் மும்பையை விட்டு வெளியேற வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. இந்த நகரில் வசிக்க விசா எதுவும் தேவையில்லை. இது எனது நிலம். எனக்கு மட்டுமல்ல இந்தியக் குடிமகன் யாராக இருந்தாலும் அவனுக்கு சொந்தமானது இந்த நிலம்.
1968ம் ஆண்டு நான் வேலை தேடி இங்கு வந்தேன். 40 ஆண்டுகளாக இந்த நகரை எனது வீடாக மாற்றிக் கொண்டுள்ளேன். எனது முதல் காரை இங்குதான் வாங்கினேன். எனது மனைவியை நான் இங்குதான் சந்தித்தேன். எனது இரு குழந்தைகளும் இங்குதான் பிறந்தனர். எனது தாயும், தந்தையும் தங்களது கடைசிக்காலத்தை இங்குதான் கழித்தனர். அவர்களை இங்குதான் நான் தகனம் செய்தேன். அவர்களது அஸ்தியை இந்த மண்ணில்தான் நான் கரைத்தேன்.
எனக்குப் பெயரும், புகழும் கொடுத்தது இந்த மண்தான் என்று உணர்ச்சிவசப்பட்டு கூறியுள்ளார் அமிதாப் பச்சன்.
ரஜினியுடன் ஒப்பிட்டு உங்களை சாம்னா இதழில் எழுதியுள்ளனரே என்ற கேள்விக்கு அதற்காக பெருமைப்படுகிறேன். ரஜினி எனது நண்பர். அவரைப் போன்ற நண்பர் கிடைத்ததற்காக சந்தோஷப்படுகிறேன். அவருடன் என்னை ஒப்பிட்டிருப்பதைக் கெளரவமாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார் அமிதாப் பச்சன்.