விளம்பரப் பலகைகள் வைக்க நிரந்தர தடை
டெல்லி: சென்னையில் சட்டவிரோதமாகவும், ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் விளம்பரப் பலகைகளை வைப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதன் மூலம் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெருநகரங்களில் சட்டவிரோத விளம்பரப் பலகைகளுக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை நகரில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகளை அகற்ற அரசு நடவடிக்ைக எடுத்தது. சென்னை விமான நிலையம் செல்லும் சாலை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் கிட்டத்தட்ட 2000க்கும் மேற்பட்ட விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டன.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதை விசாரித்த உயர்நீதிமன்றம் அரசின் நடவடிக்கை சரியே என்று தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து பெருநகரங்களிலும் சட்டவிரோத விளம்பரப் பலகைகளை அகற்ற அரசு உத்தரவிட்டது.
இதற்கிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் விளம்பர நிறுவனங்கள் அப்பீல் செய்தனர்.
இந்த மனுவில், விளம்பரப் பலகைகள் தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவால் தமிழகம் முழுவதும் 80 ஆயிரம் விளம்பரப் பலகைகள் பாதிக்கப்படும். எனவே இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
ஆனால் இந்த கோரிக்கையை இன்று நிராகரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டது.
இதன் மூலம் சென்னை நகரம் விளம்பரப் பலகைகள் இல்லாத நகரமாக மாறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல தமிழகம் முழுவதும் இனிமேல் சகட்டுமேனிக்கு விளம்பரப் பலகைகள் வைக்கவும் முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications