இலவச கலர் டிவி, கிலோ அரிசி 2 ரூ: கர்நாடக காங். தேர்தல் அறிக்கை!

கர்நாடகத்தில் மே மாதம் 3 கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் பல்வேறு விதங்களிலும் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளன.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை, கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுடன் கூடியதாக உருவாக்கியுள்ளது.
தமிழகத்தில் திமுக வெளியிட்ட கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பி அடித்தது போல, அதில் உள்ள பல முக்கிய அம்சங்களை தங்களது தேர்தல் அறிக்கையில் கர்நாடக காங்கிரஸார் இணைத்துள்ளனர்.
இலவச கலர் டிவி, 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி ஆகியவை காங்கிரஸின் முக்கிய வாக்குறுதிகளில் சில.
விலைவாசி உயர்வை பாஜகவினர் பிரச்சினையாக்கக் கூடும் என்பதாலேயே 2 ரூபாய்க்கு கிலோ அரிசி என்ற அஸ்திரத்தை காங்கிரஸ் எடுத்துள்ளதாக தெரிகிறது. இலவச கலர் டிவி திட்டமும் இந்த வாக்குறுதிகளில் பிரதானமாக காட்டப்பட்டுள்ளது. இதுதவிர விவசாயிகளைக் கவர 3 சதவீத வட்டியுடன் கூடிய கடன் என்ற கவர்ச்சி அஸ்திரத்தையும் காங்கிரஸ் பாய்ச்சியுள்ளது.
தேர்தல் அறிக்கை குறித்து செய்தியாளர்களிடம் கர்நாடக காங்கிரஸ் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் செய்தியாளர்களிடம் விவரித்தனர்.
தேர்தல் அறிக்கைக் குழுத் தலைவர் சி.கே.ஜாபர் ஷெரீப், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் செய்தியாளர்களிடம் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து கூறுகையில், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிப்போருக்கு, கிலோ ரூ. 2 விகிதத்தில் 25 கிலோ அரிசி மாதந்தோறும் வழங்கப்படும்.
வீடுதோறும் ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி இலவசமாக அளிக்கப்படும். இதுவும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிப்போருக்கு பொருந்தும்.
பெண்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், குயவர்கள், கைத்தறி நெசவுத் தொழிலாளர்கள், மீனவர்கள், குடியானவர்கள் ஆகியோருக்கு 3 சதவீதத்திற்கு உட்பட்ட வட்டியில் கடன் வசதி அளிக்கப்படும்.
ஐந்து ஆண்டுகளில் 15 லட்சம் வீடற்ற குடும்பத்தினருக்கு வீடு கட்டித் தரப்படும்.
வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிப்போருக்கு யேஷாஷ்வினி சுகாதார இன்சூரன்ஸ் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
அஷ்ரயா, இந்தியா ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வாங்கிய கடன்கள் 3 ஆண்டுகளில் முற்றிலும் தள்ளுபடி செய்யப்பட்டு விடும்.
பத்தாவது வகுப்பு முடித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதந்தோறும், 2 ஆண்டுகளுக்கு ரூ. 1200 உதவித் தொகையும், வேலை வாய்ப்புக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படும் (இதுவும் திமுக தேர்தல் வாக்குறுதிதான்).
தேர்தல் அறிக்கை விரைவில் முறைப்படி வெளியிடப்படும். மேற்கண்ட முக்கிய வாக்குறுதிகளுக்கு கட்சியின் மத்திய தேர்தல் அறிக்கை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கெல்லாம் எப்படி நிதி திரட்டுவீர்கள் என்ற கேள்விக்கு அது பிரச்சினையே இல்லை. காங்கிரஸ் கட்சிக்கு அந்தத் தெம்பு உண்டு என்று எஸ்.எம்.கிருஷ்ணா பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications