'ஒய்.எஸ்.ஆர்': லட்சுமி சிவ பார்வதி உருக்கம்!
மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி.ஆரின் 2வது மனைவி சிவபார்வதி. இவரை என்.டி.ஆர். கல்யாணம் செய்து கொண்டதால் அதிருப்தி அடைந்த அவரது மருமகன் சந்திரபாபு நாயுடு, கட்சியை அப்படியே கைப்பற்றிக் கொண்டார்.
அதுவரை சாம்ராஜ்யத்தைக் கையில் வைத்திருந்த என்.டி.ஆர். அரசியலில் தேய் பிறையானார்.
என்.டி.ஆர். மறைவுக்குப் பின்னர் லட்சுமி சிவபார்வதி அடியோடு காணாமல் போனார். புதுக் கட்சி ஆரம்பித்து தேறாமல் போனார். இந்த நிலையில் புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் சிவபார்வதி.
இன்று அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனது கணவர் என்.டி.ஆரை., முதல்வர் ராஜசேகர ரெட்டியின் உருவில் நான் காண்கிறேன். ஏழை மக்களுக்கு ஒரு கிலோ அரிசி ரூ. 2க்கு தருவது என்ற முதல்வரின் திட்டம்தான் என்னை அப்படிய யோசிக்க வைத்திருக்கிறது என்று கூறியுள்ளார் சிவபார்வதி.
சிவபார்வதியின் இந்த அறிவிப்பு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ராஜசேகர ரெட்டியை நேரில் சந்திக்கவும் முயன்று வருகிறாராம் சிவபார்வதி. தனது கட்சியை மீண்டும் புதுப்பிக்கவும், சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக ராஜசேகர ரெட்டியுடன் இணைந்து போராடவும் அவர் முயல்வதாக தெரிகிறது.
ஆனால் காங்கிரஸ் தரப்பில் வேறு மாதிரியாக பயப்படுகிறார்கள். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், தனது கணவர் வீரகண்டம் சுப்பாராவை ஏமாற்றி விட்டுத்தான் என்.டி.ஆரை. மணந்தார் சிவபார்வதி. அவரது செயல்கள் அனைத்தும் ஆந்திர மக்கள் அறிந்ததே.
எனவே சிவபார்வதி விஷத்தில் ராஜசேகர ரெட்டி மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், ராஜசேகர ரெட்டிக்கு சிக்கலாகி விடும் என்கிறார் அவர்.